2010/08/30

கூட்டியவா என்னை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 80 ராகம்: பைரவி


கூட்டியவா என்னைத் தன்னடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடமாடகத் தாமரை ஆரணங்கே.

தாமரை மலர் போன்ற அழகியே, உன் உண்மையான உருவைக் கண்ட என் கண்ணும் நெஞ்சும் பெரும் மகிழ்ச்சியடைகிறது. என் தீவினைகளை ஒழித்து உன்னுடைய அடியார்களில் ஒருவனாக அழைத்து ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என் முன்னே தோன்றுவதற்கென்றே நீ நடத்திய நாடகமா இது?

தன்னுடைய பக்தர்களைச் சோதிப்பது கடவுளரின் பொழுதுபோக்கு. இதெற்கென்றே நூற்றுக்கணக்கில் புராணக்கதைகள் இருக்கின்றன. சோதனையின் ஆழம் பலனின் பெருமையைப் பொருத்து அமையும். பிறவாமை வேண்டி அபிராமியை வணங்கிய பட்டருக்கு உயிரிழக்கும் சோதனையை வழங்கியிருப்பது பொருத்தமாகப் படுகிறது பட்டருக்கு.

'அரசனிடம் அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்ல வைத்தது அபிராமி; பிழையைத் திருத்த நிலவைக் கொண்டு வா என்று அரசனை ஆணையிட வைத்தது அபிராமி; அவசரப்பட்டு விட்டோமே என்று கையைப் பிசைந்து நின்றவருக்கு வேறு வழி எதையும் எண்ணவைக்காமல் அபிராமியைப் பற்றியே பாட வைத்தது அபிராமி; சரியான நேரத்தில் நிலவை உருவாக்கி தன்னை வெளிக்காட்டியது அபிராமி; காட்சியளித்தோடு தன் அண்மையில் சேர்த்தது அபிராமி' என்று அனைத்தையும் அபிராமியின் செயலாகவே பார்க்கிறார் பட்டர். தன்னை ஆட்டிவைத்தமைக்காக ஆனந்தப்பட்டுச் சிறந்த இயக்குனருக்கான ஆரணங்கு விருதை அபிராமிக்கு வழங்குகிறார் பட்டர்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)