2010/08/28

செப்பும் கனகக்கலசமும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 78 ராகம்: பைரவி


செப்பும் கனகக் கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.

தங்கமும் செம்பும் சேர்த்தக் கலசம் போன்ற நறுமணச்சாந்து பூசிய முலைகள், முத்தும் வைரமும் கலந்து செய்த காதணிகள், குளிர்ச்சியான அருள் விழிகள், பவள இதழ்கள், நிலவு முகம், (இவையனைத்தும்) உடைய கொடி போன்ற அபிராமியின் அழகை என் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் துணையாகக் கொண்டேன்.

'அருள் விழியே அபிராமி, உன் அழகை இரு கண்களில் எழுதி வந்தேன்' என்று பாடியிருக்கிறார் பட்டர்.

'அணி தரளக் கொப்பும் வயிரக் குழையும்' என்பதை 'வைரத்தரளக் குழை கொப்பு அணியும்' என்று பிரிக்க வேண்டும். தரளம் என்றால் முத்து. குழை என்றால் காது. கொப்பு என்றால் காதணி, தோடு, தாடங்கம். முத்து வெண்மையான நிறமுடையது; வைரம் கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடையது. இரண்டும் கலந்த காதணி இங்கே முழு நிலவுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சூரிய சந்திரனை காதணியாகக் கொண்டவள் என்று முன்பே பாடியிருக்கிறார். நிலவு குளிர்ச்சியைத் தரக்கூடியது. அருள் பொங்கும் கண்களைக் கொண்ட நிலவு முகம் என்று பாடுகிறார். இந்தப் பாடல் முழுக்க நிலவை நினைவுபடுத்திப் பாடுவது போலிருக்கிறது. 'அபிராமியே நிலவு; அபிராமி எனும் இந்த நிலவை நான் பார்த்தால், அது எனக்கென வந்தது போலிருக்கும்' என்று பாடியிருக்கிறார். கொழுமை என்றால் குளுமை. இங்கே அருளைக் குறிக்கிறது. கொழுங்கடை என்பது இங்கே கடைவிழியின் குளுமையான அருள் வீச்சைக் குறிக்கிறது. துப்பு என்றால் பவளம். இங்கே உதடுகளைக் குறிக்கிறது. (துப்பு என்ற சொல்லுக்கு பல அரும் பொருளுண்டு. சொற்சிலம்பாட்டம் ஆடியிருக்கும் வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது)

'பாட்டுக்கு பாட்டு நிலவை நினைவுபடுத்தி வருகிறேன், இனிமேல் தாளாது' என்று பாடுகிறாரா? காரணம் இருக்கிறது. நிலவை நினைவுபடுத்தியது இது தான் கடைசி முறை. அடுத்த பாடலில் நிலவு வந்து விடுகிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)