2010/08/23

தாமம் கடம்பு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 73 ராகம்: சுத்த தன்யாசி


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவரேத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நாங்கொளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.

(எமக்கு) என் தாயின் பெயரே சிறப்பு; மூன்று கண்களும் மேன்மை; கடம்ப மாலையும், கரும்பு வில்லும், ஐவகை மலரம்புகளுமே பாதுகாப்புச் சேனை; சிவந்த நான்கு கைகளே ஒளி; (அவளைக்) கடவுளர் தொழும் நேரமே காலம்; அவள் திருவடிகளே இன்பம்.

எளிய பாடலென்றாலும் நயத்தையும் பொருளையும் சுவைக்க, சற்றே பிரித்துப் படிக்க வேண்டும். 'அம்மை நாமம் செம்மை, ஒன்றோடிரண்டு நயனங்கள் திரிபுரை, கடம்பு தாமம், தனுக்கரும்பு பஞ்சபாணம் படை யாமம், செங்கைகள் நான்கு ஒளி, வயிரவர் ஏத்தும் பொழுது, திருவடி எமக்கென்று வைத்த சேமம்' என்று பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

'வயிரவர் ஏத்தும் பொழுது யாமம்' என்பதற்கு 'வயிரவர் எனும் கடவுளர் அபிராமியை வணங்கும் நேரம் நள்ளிரவு' என்றே பெரும்பாலும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அது பாடலின் கருவுக்குப் பொருத்தமென என் சிற்றறிவுக்குத் தோன்றாததால், கடவுளர் ஏத்தும் நேரமே பொழுது என்று, அதாவது, அபிராமியை வணங்கும் நேரம் தான் காலம் - வணங்காத நேரம் நேரமே அல்ல என்ற பொருளில் சொல்லியிருக்கிறேன். பட்டரின் பின்னணிக்கு இந்தப் பொருள் பொருத்தமாக அமைகிறது என்று நினைக்கிறேன். நாள் பொழுது என்று பாராமல் அபிராமியையே வணங்கிக் கொண்டிருந்ததனால் தானே அரசனிடம் சிக்கினார்? அந்தாதி பாடுகிறார்? யாமளை என்ற சொல்லுக்கு பாதுகாப்பு தருபவள் என்று பொருள் உண்டு (யாமளை புரிவது யாமம்; யாமம் என்ற தனிச்சொல்லுக்கு நள்ளிரவு, அமைதி என்று பொருள்). புரை என்ற சொல்லுக்கு மேன்மை என்று பொருளுண்டு. ஒன்றோடு இரண்டு என்றால் மூன்று. முக்கண்ணி என்ற பொருளில் வருகிறது. தாமம் என்றால் மாலை. சேமம் என்றால் நலம், இன்பம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)