2010/08/06

ஒன்றாயரும்பிப் பலவாய்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 56 ராகம்: காபி


ஒன்றா யரும்பிப் பலவாய் விரிந்திவ்வுல கெங்குமாய்
நின்றா ளனைத்தையும் நீங்கிநிற்பா ளென்றன் நெஞ்சினுள்ளே
பொன்றா துநின்று புரிகின்றவா இப்பொரு ளறிவார்
அன்றா லிலையில் துயின்ற பெம்மானுமென் ஐயனுமே.

என் நெஞ்சினுள் நீங்காத இடம்பெற்றுக் குறையாத அருள் புரியும் அபிராமி, ஒரு அணுவாகத் தோன்றி அண்டமெங்கும் பரவிப் பல வடிவங்களின் உள்ளும் புறமுமாக நிலைத்திருக்கும் (தன்மையுடையவள் என்ற) நுட்பத்தை அறிந்தவர்கள் ஆலிலையில் சிறுபிள்ளையாகத் துயில் கொண்ட திருமாலும், என் தந்தையாகிய சிவபெருமானுமே (ஆவார்கள்).

அகமும் புறமும் அண்டமும் பிண்டமும் அபிராமி என்று முன்பே சொல்லியிருக்கிறார் பட்டர். சுருதிகளின் பணையும் பதிகொண்ட வேரும் சித்தியும் முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும் புத்தியுனுள்ளே புரக்கும் புணர்முலையாள் என்று உலக இயக்கங்கள் இருப்புகள் அனைத்தையும் சக்தியின் வடிவில் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் அகம் புறம் எனும் இரு நிலைகளிலும் அபிராமி இருப்பதை வியந்து பாடுகிறார். அகம் புற நிலைகளில் இருப்பதென்றால் இயக்கங்களுக்கும் அவள் தான் காரணம் என்ற பட்டரின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உள்-வெளி இரு நிலை சம நிலைகளைப் புரிந்து கொள்வது எளிதல்ல; ஏனைய கடவுளர்க்கும் கிட்டாத அறிவு சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் மட்டுமே தெரியும் என்று பட்டர் சொல்கிறார். அவர்கள் இருவருக்கும் மட்டும் தெரியும் நுட்பமா? ஏன்? இதன் பின்னணியில் மிகச் சுவையான கதை இருக்கிறது. சிவனின் திருவிளையாடல்களும் திருமாலின் அத்தனை அவதாரங்களும் சக்தியின் சதுரங்கக் காய்கள் என்று சக்தி-பண்டாசுரக் கதையைப் படித்தவர்கள் அறிவார்கள். அந்தக் கதையின் அடிப்படையில் உருவாக்கி, வெளிநின்று, காத்து அழித்தவளும் அபிராமியே என்ற கருத்தைச் சொல்கிறார் சுப்பிரமணியர்.

அணுவிலிருந்து தோன்றி எங்கும் விரைந்து பரவுவதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகத் தோற்றமும் வளர்ச்சியும் அப்படி ஏற்பட்டது தான் என ஆய்வறிக்கைகளின் வழியாக இப்போது தெரிந்து கொண்டிருக்கிறோம். (அந்த அறிவின் வித்து பட்டரின் காலத்துக்கு முன்பே இருந்தது; மேலை நாட்டு அறிவியல் வளர்ச்சியின் வித்தாகவும் இருந்தது; கடவுள்/மத குருக்களுக்கு அஞ்சி வெளிப்படாமல் கலிலியோவின் சாத்தப்பட்ட அறைக்குள் தூசி படர்ந்திருந்தது - நியூடன் வந்து தூசி தட்டி மறு அறிக்கை விடும் வரை - அவருக்குப் பின் வந்த ஐன்ஸ்டைன் ஹாகின்ஸ் வகை விஞ்ஞானிகள் அந்தக் கருவை வளர்த்து ஐம்பது வருடங்களுக்கு முன் big bang theoryஐ உலகம் முழுமையாக ஏற்கும் வரை). பட்டர் போன்ற இந்துமத அறிஞர்கள் (கீழை நாட்டு, நம்ம ஊர் மெய் ஞானிகள்?) நூற்றாண்டுகளுக்கு முன் இந்தத் தத்துவத்தை வெகு சுலபமாகச் சொல்லியிருக்கிறார்கள் - கடவுள் மதம் எனும் போர்வை அல்லது ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அஞ்சாமல் வெளிப்படுத்தினார்கள் - என்பது வியந்து போற்றத்தக்கது.

"அம்மா தாயே அபிராமி, நீ உள்ளே நின்று ஒளி வீசி அருள் புரிவது சரி, கொஞ்சம் வெளியே வந்து உன் அருளைக் காட்டம்மா, ஒளியைக் காட்டம்மா. சிவனுக்கும் திருமாலுக்கும் புரிந்தது இந்த சாமானியர்களுக்கும் புரியட்டும்" என்று பட்டர் உட்பொருள் வைத்து அபிராமியுடன் அண்மையாகப் பேசுவதை ரசிக்க முடிகிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)