2010/08/17

தோத்திரம் செய்து...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 67 ராகம்: சஹானா


தோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றமொரு
மாத்திரைப் போதுமனதில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றிநாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலா நிற்பர் பாரெங்குமே.

அபிராமியின் மின்னொளி போன்ற தோற்றத்தைக் கணந்தோறும் மனதில் வைத்துப் போற்றி வணங்காதோர், நற்குலம் செல்வம் கல்வி குணம் கொடை அனைத்தையும் இழந்து பாத்திரமேந்தி வீடு வீடாகப் பிச்சை எடுத்துத் துன்புறுவர்.

'செய்து தொழுது' என்பதை 'செய்யாது தொழாது' என்று எதிர்மறையில் பொருள் கொள்ள வேண்டும். மாத்திரை என்றால் கணம். (வழக்கழிந்து போன கால அளவு). வண்மை என்றால் வளமை, தருமம், கொடை என்று பொருள். கோத்திரம் இங்கே செல்வம் என்ற பொருளில் வருகிறது. பலி என்றால் பிச்சை, இரத்தல். 'உழலா நிற்பர்' என்பது 'உழன்று நிற்பர்' என்ற எதிர்மறையில் வருகிறது.

அபிராமி பெயரைச் சொன்னால் சோறு கிடைக்குமா என்று தெளிவாகச் சொல்லாவிட்டாலும், அவள் பெயரைச் சொல்லாவிட்டால் சோறு கிடைக்காது என்பதை பட்டர் தெளிவாகச் சொல்கிறார். அறம் பாடுவது போல் தீர்க்கமாகத் திட்டுகிறார். அபிராமியை மனதில் வையாதவர் பாரெங்கும் திரிந்து பிச்சையெடுப்பார் என்கிறார்.

தன்னைக் காப்பாற்று என்று இதுவரைத் தொடர்ந்து பாடியவர், இந்தப் பாடலில் மற்றவரைத் திண்டாட விடு என்பது போல் பாடியிருப்பது ஏனென்று தெரியவில்லை. நேரமாகிறது, நிலைவைக் காணோம் அபிராமியையும் காணோம் என்று கலங்கியிருப்பாரென்று தோன்றவில்லை. தன்னைக் கேலிக்குள்ளாக்கிய மற்ற புரோகிதர்களையும் அரசனையும் தாக்குகிறார் என்று ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தாலும், அபிராமியை நாளும் பொழுதும் மனதில் நிறுத்தி வணங்குவதால் தனக்கு பிச்சையெடுக்கும் நிலையேற்படப் போவதில்லை என்பதையே பட்டர் தீர்மானமாகச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)