2010/08/02

வையம் துரகம்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 52 ராகம்: சாரங்கா


வையந் துரகம் மதகரி மாமகுடஞ் சிவிகை
பெய்யுங் கனகம் பெருவிலையாரம் பிறை முடித்த
அய்யந் திருமனையாளடித் தாமரைக் கன்புமுன்பு
செய்யுந் தவமுடையார்க் குளவாகிய சின்னங்களே.

உலக அரசாளும் பதவி, யானை-குதிரை-தேர் எனும் சேனை, பொன்-மணி-முத்தாரமெனும் பெருஞ்செல்வம் உடையவரெல்லாம், பிறைநிலாவைத் தன் தலையில் தாங்கியிருக்கும் தந்தை சிவபெருமானின் இல்லத்தரசி (என் தாய்), அபிராமியின் பாதங்களைத் தங்கள் முற்பிறவிகளில் பணிந்து வணங்கிய தவப்பயனைப் பெற்றவர்கள் (ஆவர்).

அபிராமியைப் பணிந்து வணங்கினால் இத்தகைய செல்வங்கள் பெறலாம் என்றும் பொருள் கொள்ளலாம். பதவி, படை, பெருஞ்செல்வமுடையவரைக் கண்டால் அபிராமியின் அருள் பெற்றவரெனத் தெரிந்து கொள்ளலாம் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'பதவி, படை, பொற்செல்வம் இவை எல்லாம் மாட்சியின் அடையாளங்கள், அபிராமியின் திருவடிகளைப் போல' என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

அபிராமியின் அருள் பெற்றவர்கள் அனைத்துச் செல்வமும் உடையவர்கள் என்ற கருத்தைச் சொல்கிறார் பட்டர். அரசபதவி, சேனை, செல்வம் என்று அனைத்தும் உடைய அரசர்களே தவம் கிடந்து போற்றும் அபிராமியைத் தானும் பணிந்து வண்ங்குகையில் புதிதாக வந்த இந்த சரபோஜி அரசன் விவரம் தெரியாமல் நடந்து கொள்கிறானே என்ற பட்டரின் ஏளனம் பாடலின் உட்பொருள்.

இதே கருத்து லலிதா சஹஸ்ரநாமத்திலும் வருகிறது. திரிபுரசுந்தரியைச் சுற்றி தேர், யானை, குதிரை, பொன் என்று அனைத்தும் கோடிக்கணக்கில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள், அரசர்கள், பெருஞ்செல்வந்தர்கள் அனைவரும் திரிபுரசுந்தரியைச் சுற்றி அவள் காலடியில் தவம் கிடப்பதே காரணம் என்பது இந்த வர்ணனைகளில் பொருள்.


பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)