2010/08/03

சின்னஞ் சிறிய...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 53 ராகம்: சாரங்கா


சின்னஞ் சிறிய மருங்கினிற் சாத்திய செய்யப்பட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரியகுழலுங் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந் தனியிருப்பார்க் கிதுபோலுந் தவமில்லையே.

சிவந்த பட்டாடை சுற்றப்பட்ட சிறிய இடை, இடை தாங்கும் பெரிய முலைகளின் மேல் பரவியிருக்கும் முத்து மாலை, மணங்கமழ் மல்லிகை அடர்ந்திருக்கும் கரிய கூந்தல், அழகிய கண்கள் மூன்று இவையனைத்தையும் மனதில் நிறுத்தி அபிராமியைத் தவிர வேறெந்த பற்றுமில்லாமலிருப்பதே சிறந்த தவம்.

பிறவாமை கருத்தைத் தொடர்ந்து அறிவுறுத்தும் பாடல். தன்னந்தனி இருப்பார்க்கு என்பதை பற்றில்லாமல் இருப்பவருக்கு என்று பொருள் சொல்லியிருக்கிறேன். தனிமையில் தியானித்திருப்பவருக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.

தன்னந்தனி இருப்பார்க்கு என்பதைக் கொஞ்சம் ஆய்ந்து பார்க்கலாம். இந்த உலகில் தன்னந்தனி இருப்பு சாத்தியமா? பிறவி என்று எடுத்து விட்டால் ஏதாவது ஒரு பற்று அல்லது பந்தம் இருந்து கொண்டே தான் இருக்கும். காட்டிற்கு தனியே சென்று தவமிருப்பவர் கூட அந்தக் காட்டிலே இருக்கும் மரம் செடி கொடி மிருகம் மேல் பற்று கொண்டு தவப்பயனிழந்த கதைகள் புராணங்களில் ஏராளம். தன்னந்தனி என்பது மனிதரே இல்லாத என்ற பொருளில் வருவது போல் தோன்றினாலும் இங்கே பந்த பாச ஆசை கோபம் உறவு அற்ற நிலையைக் குறிக்கிறது. அனைத்து உணர்வுகளயும் அடக்கித் தவமிருப்பதையே இப்பாடலின் 'தன்னந்தனி' நிலை குறிக்கிறது. அப்படி மனதைக் கட்டுப்படுத்தித் தவம் செய்ய ஒரு உருவம், ஒலி என்று ஏதாவது ஒரு நிலையான காட்சி, அகக்காட்சியானாலும், தேவைப்படுகிறது. அபிராமியின் அழகே அந்தக் காட்சியாக அமைய வேண்டும் என்பது பட்டர் பாடலின் உட்பொருள்.

மருங்குல் என்றால் இடை. பிச்சி என்றால் ஜாதிமல்லிகை, செண்பகப்பூ என்று படித்திருக்கிறேன். கண் மூன்று என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவள் என்ற பொருளைக் கொள்ளலாம். அல்லது அபிராமியின் நெற்றியில் இருக்கும் மஞ்சள் குங்குமத் திலகத்தின் பொலிவையும் குறிப்பதாகக் கொள்ளலாம். லலிதா சஹ்ஸ்ரநாமத்திலும் சௌந்தர்யலஹரியிலும் 'நெற்றிக்கண்ணி' என்று வருகிறது. சிவனுடைய நெற்றிக்கண்ணின் கனலானவள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறாள் சக்தி.

'பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழல்' அருமையான சொல்லாட்சி. வண்டு மொய்க்கும் பூ அறிவோம்; பூ மொய்க்கும் கூந்தல்? அடர்த்தியான பூச்சூடலை அழகாகச் சொல்லியிருக்கிறார். அபிராமியின் அழகைப் படிப்பவர் கண்முன் கொண்டு வர, பட்டர் பாடியிருக்கும் பல பாடல்களில் இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். சாரங்கா ராகத்தின் ஊஞ்சலினிமையில் பாடல் இன்னும் சிறப்பாகிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)