2010/08/26

குறித்தேன் மனத்தில்....

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 76 ராகம்: பைரவி


குறித்தேன் மனத்தில் நின்கோல மெல்லாம் நின்குறிப் பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தே னவிழ் கொன்றைவேணிப் பிரானொரு கூற்றை மெய்யில்
பறித்தே குடி புகுதும் பஞ்சபாண பைரவியே.

ஐவகை மலரம்புகளை ஏந்திய சக்தியே, வண்டுகள் துளைக்கும் அளவுக்கு மயக்கும் தேனைக் கொண்ட கொன்றை மலர் மாலையை முடியில் அணிந்த சிவனுடைய உடலின் ஒரு பகுதியை உன்னுடன் சேர்த்துக் கொண்ட உனது அழகிய வடிவங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்; உன் திருவுளப்படியே எமன் என்னைத் தேடி வரும் வழியைத் தடை செய்து விட்டேன்.

'பஞ்ச பாண பைரவியே, வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் மெய்யில் ஒரு கூற்றை பறித்தே குடி புகுதும் நின் கோலமெல்லாம் மனத்தில் குறித்தேன்; நின் குறிப்பறிந்து மறலி வருகின்ற நேர்வழி மறித்தேன்' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

குறிப்பு என்றால் விருப்பம் என்று பொருளுண்டு. 'குறிப்பறிந்து' என்பது இங்கே அபிராமியின் விருப்பப்படி, 'பட்டருக்கு உதவும் திருவுளப்படி' என்ற பொருளில் வருகிறது. மறலி என்றால் எமன். மறல் என்றால் மரணம். மரணத்தைக் கொண்டு வருபவன் மறலி. கிண்டி என்பதற்கு துளைத்த என்று பொருள். வெறி என்றால் மயக்கம் என்று பொருளுண்டு. வேணி என்றால் சடை என்று பொருளுண்டு. கூறு என்றால் பிரிவு, பகுதி. இங்கே 'சிவனுடைய உடலில் ஒரு பாதியை' என்ற பொருளில் வருகிறது. பைரவி என்றால் வலிமையுடையவள், சக்தியுடையவள் என்று பொருள். அபிராமி தனக்கு உதவி செய்ய முன்வந்து விட்டாள் என்று பட்டர் உணர்ந்தது போல் பாடியிருக்கிறார்.

பயிரவி என்று நேர்சொல் இருப்பதாக என் சிற்றறிவுக்கு தெரியவில்லை. பயிரவி என்பது இங்கே பைரவியைக் குறிக்கிறது. அந்தாதித் தொடை காரணமாகவும் அடுத்த பாடலின் எதுகை காரணமாகவும் பைரவி, பட்டர் பாட்டில் பயிரவி ஆனாளென்று நினைக்கிறேன். பைரவி என்பது பைரவனின் பெண்பால் - வலிமையுடையவள் என்று பொருள். வயிரவி என்பதன் மருவாகக் கொள்ளலாம். வயிரவி என்பது வயிரவனின் பெண்பால். வயிரவன் என்றால் தலைவன், சிவன் என்று பொருள். வயிரவி என்பதற்கு ஒளிவீசுகிறவள் (வயிரம்:வைரம்) என்றும் பொருள்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் பைரவி ராகத்தில் அமைந்துள்ளன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)