2010/08/12

தங்கச்சிலை கொண்டு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 62 ராகம்: ஆபேரி


தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்துமத
வெங்கட் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதுமென் சிந்தையதே.

மின்னும் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புர அசுரர்களை வீழ்த்தியவனும், மதயானை அசுரனைக் கிழித்து அவன் உடலைத் தோலாகப் போர்த்திக் கொண்டச் சிறந்த வீரனுமான சிவனுடைய வலுவான உடலில் தழும்பேறும்படி தன் இளநீர் போன்ற முலையழுந்தச் சேர்ந்தவளான என் தலைவி (தன்) பொன் போலும் சிவந்த கைகளில் ஏந்திய கரும்பு வில்லும் மலரம்பும் என் மனதில் என்றும் நிலைத்திருக்கிறாள்.

தங்கச் சிலை இங்கே மேருமலையை வில்லாக வளைத்த விளையாட்டைக் குறிக்கிறது. வெங்கட் கரி என்பதை வெம்+கண்+கரி எனப் பிரிக்கலாம். மதமேறிச் சிவந்த கண்களைக் கொண்ட யானை என்ற பொருளில் வருகிறது. கஜாசுரனைக் கொன்ற கதை. சேவகன் என்ற சொல்லுக்கு வீரன் என்ற பொருளுண்டு. முப்புர அசுரர்களை சாய்த்தும் கஜாசுரனைக் கிழித்தும் சாகசம் செய்தவன் என்பதால் வீரன் என்ற பொருத்தமான பொருளைக் கொள்ள வேண்டும். அபிராமிக்கு சேவை செய்யும் சேவகன் என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள். குரும்பை என்ற சொல் தென்னை, பனை மரங்களின் காய்களைக் குறிப்பது. மலையை வளைத்த தோளும் யானையைக் கிழித்துப் போர்த்திய உடலும் கொண்ட வீரனுடைய மார்பில், அபிராமி மார்பின் தடம் பட்டுக் குறியுண்டானது என்று பட்டர் சொல்வது ரசிக்கும்படியான சிருங்காரக் கற்பனை. இறைவனுடன் இணைந்த அர்த்தநாரி என்றும் இந்த வரிகளுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். கோ என்பதற்கு உயர்ந்த என்று பொருள். கனகம் என்றால் பொன்.

பட்டரின் பாடல்களில் புதைந்திருக்கும் சுவையான புராணக்கதைகளில் கஜாசுரன் வதமும் ஒன்று. இந்தக் கதைக்கும் பல தென்னாட்டு வடநாட்டு வடிவங்கள் இருக்கின்றன. 'காணவில்லை கணவனை' என்று பார்வதியைக் கலங்க வைத்தது... திருமாலையும் நந்தியையும் நேயர் விருப்ப நடனமாடச் செய்தது... தங்கள் மனைவிகளைக் கற்பிழக்கச் செய்த சிவனைப் பழிவாங்க தாருகாவன முனிவர்கள் சதி செய்தது... பிள்ளையாருக்கு யானைத்தலை உண்டானது... என்று வகை வகையாக கஜாசுரக் கதைகளைப் புராணங்களில் படிக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)