2010/08/21

அழகுக்கு ஒருவரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 71 ராகம்: சுத்த தன்யாசி


அழகுக் கொருவரு மொவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற் றுநின்ற நெஞ்சே இரங்கேலுனக் கென்குறையே?

குளிர்ந்த நிலவின் பிறையைச் சூடிய ஒப்பற்ற அழகியான வேதங்கள் கொண்டாடும் யாமளையினுடைய சிவந்தப் பாதத்தாமரைகளே பற்றுக் கோடாக கிடைத்திருக்கும் பொழுது, துன்பமுறும் நெஞ்சே உனக்குக் குறையொன்றுமில்லை, வருந்த வேண்டாம்.

வேதங்களைக் காற்சிலம்பாகக் கொண்டவள் என்பதை முன்பு பரிபுரச்சீரடி என்று வர்ணித்தவர், வேதங்கள் பட்டுச் சிவந்த பாதத்தாமரை என்று இங்கே சொல்கிறார். வேதங்கள் மேல் நடம் புரிந்த என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'பனிமா மதியின் குழவி' இங்கே பிறைச்சந்திரனைக் குறிக்கும். இமயன் மகள் என்றும் பொருள் கொள்ளலாம்; எனில், திருமுடிக் கோமளம் ஒளிவீசும் மென்மையான கூந்தலையுடையவள் என்ற பொருளில் வரும். இழவு என்றால் துன்பம், வீழ்ச்சி என்று பொருளுண்டு. இரங்குதல்: வருந்துதல், கெஞ்சுதல். யாமளை என்ற சொல்லுக்கு நல்வழியில் காத்தருள்பவள் என்ற பொருளை முன் பாடலொன்றில் பார்த்திருக்கிறோம் (எந்தப் பாடலென்று சொல்லுங்கள்?).

'அபிராமியின் பாதங்களைக் கொடிக்கொம்பாகப் பற்றிக்கொண்ட பின் குறையேதுமில்லை, வருந்த வேண்டாம், பசுந்ததமிழ்ப் பைங்கிளியின் பாதத்தாமரைகளே பாதுகாப்பு' என்று தன் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்வதாய் வருகிறது பட்டரின் பாடல். மலரடி பல்லவமல்லது பற்றொன்றிலேன் என்றார் முன்பு.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)