2010/08/08

அருணாம் புயத்தும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 58 ராகம்: காபி


அருணாம் புயத்துமெஞ் சித்தாம் புயத்துமமர்ந் திருக்குந்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாற்றகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமுங் கராம்புயமுஞ்
சரணாம் புயமும் அல்லாற்கண் டிலேனொரு தஞ்சமுமே.

விடியலின் செந்நிறத்தையொத்த தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் நற்குணங்களின் இருப்பிடமான, இளந்தாமரை மொட்டைப் போன்ற முலையுடைய, பெண்ணே (அபிராமியே) என் மனத்தாமரையிலும் குடியிருக்கிறாள். (அவளுடைய) அருள் பொங்கும் விழித்தாமரைகளும், அழகான முகத்தாமரையும், செழித்த கைத்தாமரைகளும், மென்மையான பாதத்தாமரைகளும் அல்லாமல் நான் வேறொரு அடைக்கலம தேடவில்லை.

அம்புயம் என்றால் தாமரை. (அம்பு+உயம்: நீரில் பிறந்து வாழும் என்பது பொருள்; அம்பு=நீர், உயல்/ம்=உய்வது)

அம்புயம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு உருவக விளையாட்டு ஆடியிருக்கிறார் பட்டர். லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்யலஹரியிலும், இங்கே பட்டர் பாடல்களிலும், சக்தியைத் தாமரையெனப் பாடுவதை முன்பே பார்த்திருக்கிறோம். ஆயிரமிதழ் தாமரை என்பது நம் ஒவ்வொருவர் மனதிலும் (மூளைப்பகுதி, முதுகுத்தண்டு என்று பல இடங்களைச் சொல்கிறார்கள்) இருக்கும் மூலாதாரம் (குண்டலியம்) என்பதைக் குறிப்பதாகவும், அதை அறிந்தவர்கள் (விடுவித்தவர்கள்) அதனுள் குடியிருக்கும் சிவ-சக்தியை அறிந்தவராவர் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு யோக நிலையென்று சொல்லப்படுகிறது. பட்டர் முன்பே 'அம்புயாதனத்து அம்பிகையே' என்று பாடியிருக்கிறார். இங்கே அபிராமி எனும் தாமரையை இன்னும் கொஞ்சம் விவரமாகப் பாடுகிறார்.

அருணம் என்றால் விடியல், செம்மை என்று பொருள். இங்கே 'விடியலைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய தாமரை' என்ற பொருளில் வருகிறது. புறத்தாமரை மலர்ந்தால் பொழுது விடிவது போல் அபிராமி எனும் அகத்தாமரை மலர்ந்ததும் உள்மனதின் இருளும் விலகியது என்று பட்டர் பாடுவதாகவும் சுவையாகப் பொருள் கொள்ளலாம். தருணம் என்றால் இளமை என்று பொருளுண்டு. 'தருண அம்புய' என்பது இளந்தாமரை, தாமரை மொட்டு, என்ற பொருளில் வருகிறது. தகை என்றால் அழகு. 'தகை சேர்' என்பதை இந்தப் பாடலில் எங்கே வேண்டுமானாலும் சேர்த்துப் படிக்கலாம். அழகு சேரும். கைகளைத் தாமரை என்பானேன்? அருள் வழங்கும் பொழுது பரந்து விரிந்த அபிராமியின் கைககள் தாமரை போல் இருக்குமாம். அடைக்கலம் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் அபிராமியின் கைகள் பரந்து விரிந்த தாமரை போல் இருக்கும் என்பது பட்டரின் கற்பனை.

பட்டர் யோகச் சித்தரா தெரியவில்லை. அப்படி இருந்தால், யோக நிலையைக் கடைபிடித்து பட்டர் குண்டலினியை விடுவித்த அனுபவத்தில் பாடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)