2010/08/29

விழிக்கே அருளுண்டு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 79 ராகம்: பைரவி


விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்க,
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்துங்கயவர் தம்மோடென்ன கூட்டினியே?

அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல், பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை)

'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின், பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர்.

இந்தப் பாடலின் பின்னணி: 'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே' என்று உருகி உருகிப் பாடிய பட்டரின் அருந்தமிழுக்கு மயங்கிய அபிராமி, தன் காதணியை எடுத்து வானில் சுழற்றி எறிந்தாளாம். வைரத்தரளக் குழை கொப்பான அபிராமியின் காதணி வானில் முழு நிலவையும் மிஞ்சும் அளவுக்கு ஒளி வீசி நின்றதாம். அந்தப் பரவசத்தில் பட்டர், 'அன்னையைப் பார்த்தபின் இன்னும் என்ன நெஞ்சமே?' என்று பாடியிருக்கிறார்.

பழி என்றால் பாவம், வீண், பலனற்ற என்று பொருள். 'பழிக்கே சுழன்று' என்பது வீணானப் பிறவிச் சுழற்சியைக் குறிக்கிறது. வேதம் என்றால் அறிவு. 'வேதம் சொன்ன வழி' என்பது இங்கே அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவைக் குறிக்கிறது. வேத முறைப்படி வணங்கச் சொல்லவில்லை பட்டர். அருளைத் தவிர வேறொன்றுமே இல்லையாம் அபிராமியின் விழிகளில். வேத முறையோ பேத முறையோ, அபிராமியை வணங்க வேண்டும் என்ற அறிவு இருந்தால் போதும். எப்படி வணங்கினாலும் யார் வணங்கினாலும் அவளுடைய கொழுங்கடைப் பயனுண்டு என்பதே பாடலின் சாரம்.

அபிராமி அருள் புரிந்து விட்டாளே? நிலவு தோன்றிவிட்டதே? பட்டர் இந்தப் பாடலோடு ஏன் நிறுத்தவில்லை என்று தோன்றுகிறது. பிறவாமைக்கான பாயின்ட் டு பாயின்ட் நேர்வழி வண்டியுடன் அபிராமி காத்திருக்கும் பொழுது பட்டர் தொடர்ந்து பாடியதேன்? அபிராமியைக் கண்ட ஆனந்தத்தில் இன்னும் ஒன்றிரண்டு பாட்டு பாடியிருந்தாலும் பரவாயில்லை, 'கொஞ்சம் இரம்மா, இன்னும் இருபது பாட்டு பாக்கியிருக்கிறது' என்று பாடியிருக்கிறாரே? கடவுளைக் கண்டவுடன் 'சட்டி சுட்டதடா' என்று உயிர் துறந்த முனிவர்களின் கதையை முன்பு பார்த்தோம். பட்டர் தொடர்ந்து பாடியது தமிழுக்கும் நமக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. குறை சொல்வானேன்?

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)