2010/08/20

கண் களிக்கும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 70 ராகம்: சஹானா


கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்குங்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்க்குலப்
பெண் களிற்தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

மண்ணுக்கு அழகு சேர்க்கும் பசுமையான நிறமும், இசைக்கு இனிமை சேர்க்கும் குரலும், வீணை ஏந்திய கையும் நெஞ்சுமாக கடம்ப வனத்தில் தோன்றியிருக்கும் மதங்கர் குலப் பெண்ணான என்னுடைய தாயின் பேரழகை, என் கண்கள் மகிழும் அளவுக்குக் கண்டேன்.

நரம்பையடுத்த இசை வடிவான அபிராமியின் அழகை இன்னும் விவரிக்கிறார் பட்டர். மண்ணுக்குப் பசுமையும், இசைக்கு இனிமையும், பெண்ணுக்கு அழகும் சிறப்பு. இவையனைத்தும் அபிராமியின் தன்மைகளே என்கிறார் பட்டர்.

கடம்ப அடவி இங்கே மதுரையைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். பயோதரம் என்றால் பால், முலை, நெஞ்சு என்று பொருள். வீணை, கைகள் என்பதைத் தொடர்ந்து வருவதால், பயோதரம் 'வீணை ஏந்திய நெஞ்சு' என்ற பொருளில் வருகிறது.

மதங்க முனிவர் தவமிருந்து பார்வதியைப் பெண்ணாகப் பெற்றது சிவபுராணக் கதை. மதங்கம் என்றால் யானை. மதங்கம் என்றால் முருகு (அழகு) என்றும் பொருள். பார்வதியின் இரண்டு பிள்ளைகளும் 'மதங்கர்' என்று அழைக்கப்படுகிறார்கள். யானையை வலிமைக்கும் அழகுக்கும் அறிவுகூர்மைக்கும் நினைவுகூர்மைக்கும் சின்னமாகச் சொல்வர். பார்வதியின் பிள்ளைகளில் முருகனும் கணேசனும் இத்தன்மையுடைவர்கள் என்பதற்கு திருவிளையாடல் கதைகள் உதாரணம். மதங்க - யானை - அழகி பார்வதியின் கதையும் சுவையான திருவிளையாடல் கதை. மாதங்கி என்ற தமிழரசி (சக்தியின் முதல் மந்திரி, தளபதி?) பற்றியும் படித்திருக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)