2010/08/11

நாயேனையும் இங்கொரு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 61 ராகம்: ஆபேரி


நாயே னையுமிங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயே னறியுமறிவு தந்தாய் என்னபேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கச்சியே.

மலையரசன் இமவான் மகளே, திருமாலின் தங்கையே, என் தாயே! நாயைப் போல் எளியவனான என்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக்கொண்டதுடன் (நில்லாமல்), அறிவில்லாத எனக்கு உன் இயல்பை அறிந்து கொள்ளும் அறிவையும் கொடுத்தது நான் பெற்ற பெரும் பேறாகும்.

அபிராமியின் அருள் தனக்குக் கிடைத்தது தகுதிக்கு மீறிய சலுகை என்று தொடர்ந்து பாடுகிறார் பட்டர். நாய் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார். சுயமாகச் சிந்திக்கும் அறிவில்லாமல் சோறு போட்ட இடம் சொர்க்கமென நினைக்கும் ஐந்தறிவுப் பிராணியைப் போன்ற தன்னை ஒரு பொருட்டாக மதித்து விரும்பி ஏற்றுக் கொண்ட அபிராமியிடம் விசுவாசமுள்ள நாய் என்கிறார்.

கீழ்த்தரமான நிலையைக் குறிக்க நாயை உவமையாகவும் உதாரணமாகவும் காட்டி, நிறைய இறையிலக்கியங்களில் பாடியிருக்கிறார்கள். நாயிற் கடை, அடி நாயேன் என்று தடுக்கி விழுந்தால் அங்கங்கே திருவாசகத்தில் 'நாயேன்' என்று வருகிறது. திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் என்று எதைப் படித்தாலும் வெறிநாய், சொறிநாய், கேடுகெட்ட நாய், அந்தநாய், இந்தநாய் என்று வாயில்லாப் பிராணியைப் புரட்டி எடுத்திருக்கிறார்கள். நாயையும், அதற்கடுத்து பெண்ணையும், எவ்வளவு கேவலமாகச் சொல்ல முடியுமோ சொல்லிவிட்டு அதே வீச்சில் இறையருள் கேட்டு பாடலை முடிப்பதைக் காணலாம். ஐந்தறிவுப் பிராணி வாயில்லா ஊமை; ஆறறிவுப் பிராணியோ வாயிருந்தும் ஊமை.

பேய் என்ற சொல்லுக்கு அறிவிலி என்று பொருள். என்ன செய்கிறோம் என்ற நினைவு இல்லாது செயல் புரியும் நிலைக்கு பேய்த்தனம் என்று பெயர். (அறிவு பேதலித்துப் போனவரை அந்த நாளில் கோவிலில் இருத்தி கடவுளை வேண்டிப் பாடுவார்களாம்; பேயோட்டும் சடங்கு இப்படித் தொடங்கி விபரீதமானது)

அபிராமியை உள்ளபடி அறிந்துகொள்ளும் அறிவு பெற்றதற்காக நெகிழ்ந்து, அதன் மெருகை மேம்படுத்திக் காட்டுவதற்காக, அறிவில்லாத நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பட்டர் பாடியிருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ஆபேரி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)