2010/08/18

பாரும் புனலும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 68 ராகம்: சஹானா


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளிஊறு ஒலியொன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.

நீர் நிலம் தீ வளி வானம் என அனைத்து நிலைகளுமாய்ப் பரந்தவளும், மணம் சுவை ஒளி தீண்டல் ஓசை என இத்தன்மைகள் ஒருங்கே சேர்ந்தவளும், சிவனின் ஆசை நாயகியுமான அபிராமியின் பாதங்களை அடைந்தவர்கள் பெற இயலாத செல்வமெதுவுமில்லை.

'அபிராமியை நினைக்காவிட்டால் நாய் படாத படுவர்' என்று முந்தைய பாடலில் வன்மையாகப் பயமுறுத்தியவர், இந்தப் பாடலில் 'அபிராமியை வணங்குவோர் எல்லாச் செல்வங்களையும் பெறுவர்' என்று மென்மையாகச் சொல்கிறார். அறம் பாடும் பட்டரை விட, வரம் பாடும் பட்டர் பெட்டர் என்று படுகிறது.

பார்: நிலம், புனல்:நீர், கனல்:தீ, கால்:காற்று, விசும்பு: ஆகாயம். முருகு என்றால் அழகு, மணம் என்று பொருள். (அழகனென்பதால் முருகனா, முருகனென்பதால் அழகனா?) ஊறு என்றால் தீண்டல், தொடல், ஸ்பரிசம் என்று பொருள். இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் நிலை, தன்மை அனைத்துமே அபிராமி தான் என்கிறார் பட்டர். அத்தகைய அபிராமியின் சிறப்பான பாதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்காத செல்வம் எதுவுமே இல்லை என்று வலியுறுத்துகிறார். 'ஐயா, கிடைக்காத செல்வமே இல்லையென்கிறீரே, அவை யாவை என்று சொல்லக்கூடாதா?' என்று யாரும் கேட்டுவிடக்கூடாதே என்று அச்செல்வங்களை வரும் பாடலில் விளக்குகிறார்.

சிவகாம சுந்தரியின் பெயர்க்காரணம் சுவையான, சிருங்காரப் புராணக்கதை. சிவராத்திரியின் பின்னணி. எரிந்த மன்மதனின் மலரம்புகளை எடுத்துக் கொண்டு பார்வதி சிவனைச் சந்தித்த ராத்திரி சிவராத்திரி. மன்மதனின் ஐந்து மலரம்புகள் ஒவ்வொன்றும் சிவனுக்கு ஏற்படுத்திய உபாதைகளையும் சிவன் விழித்திருந்த காரணத்தையும் புராணத்தில் படிக்கலாம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)