2010/07/14

இழைக்கும் வினைவழியே...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 33 ராகம்: சண்முகப்ரியா


இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சலென்பாய் அத்தசித்த மெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுதுன்னையே அன்னையே என்பனோடிவந்தே

என் தந்தையாகிய சிவனின் மனம் முழுதும் நிறைந்திருக்கும் மணங்கமழ் சாந்து பூசிய கும்பம் போன்ற மார்பகங்களையுடைய தாமரை முகத்தவளே! எளியோரைக் காக்கும் யாமளையே! என்னுடைய தீவினைகளின் பயனாக எமன் என்னை அச்சுறுத்தி அழைக்கும் பொழுது, அம்மா என்று வருந்தி உனை அழைப்பேன்; நீ ஓடி வந்து கலங்காதே என்று சொல்லி என்னைக் காத்தருள்வாய்.

அத்தன் என்றால் தந்தை என்று பொருள். அத்த சித்தமெல்லாம் என்பதை அத்தர்+சித்தம்+எல்லாம் எனப்பிரிக்க வேண்டும். 'தந்தை மனம் முழுதும்' என்று பொருள். களபம் என்றால் சேறு, சாந்து என்று பொருள். இங்கே மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனம் கலந்த மணங்கமழ் சாந்து என்ற பொருளில் வருகிறது. யாமளைக்குப் பொருளை முன்பே பார்த்திருக்கிறோம். உழைக்கும் என்ற சொல்லுக்கு வருந்தும், நோகும் என்று பொருள் உண்டு.

இறையிலக்கியங்களில் பெண் கடவுளரின் உடலழகை விவரித்துப் பாடுவதைப் பற்றி முன்பு எழுதியிருந்தேன். இந்தப் பாடலின் முதல் வரியில் 'கும்பம் போன்ற முலை' என்றும் அடுத்த வரியில் 'அன்னையே' என்று வருவதையும் கவனிக்கவும். பசிக்கும் பாசத்துக்கும் அழும் பிள்ளைக்கு அன்னையின் நெஞ்சமே தஞ்சம். அந்தக் கருத்தில் "அம்மா என்று வருந்தி உன்னை அழைப்பேன்; நீ ஓடி வரவேண்டும்" என்று பட்டர் அபிராமியை ஏங்கிப் பாடும் பொழுது, மின்னல் இடுப்பை உடையவளே என்று வர்ணிக்காமல், அபிராமியின் நெஞ்சம் பட்டரின் நினைவுக்கு வருவது பொருத்தமாகப் படுகிறது. அஞ்சி அழும் பிள்ளையை அணைத்துக் கொண்ட தாய் என்ன சொல்லுவாள்? "நானிருக்கிறேன் பார். பயப்படாதே. அம்மா வந்துவிட்டேன் பார்" என்பாள். அணைப்பில் கிடைக்கும் தஞ்சம் ஆதரவான மொழியில் கிடைக்கும் பாதுகாப்பாக மேம்படுகிறது. (தந்தையின் அணைப்பு கிடைத்தாலும், கூடவே 'என்ன எல்லாத்துக்கும் பயந்து நடுங்குறதா?' என்ற வசையும் கிடைக்கும்). ஒரு குழந்தை போல் பட்டர் அபிராமியிடம் தஞ்சமும் ஆறுதலும் எதிர்பார்ப்பது சுவை.

காலனின் வரவைத் தீவினைப் பயனென்று கருதி அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வினைவழியே என்று இங்கே பொதுவாகச் சொன்னாலும், இறக்கும் தறுவாயில் தீவினை அதிகமாக இருந்தால் எமனின் தூதர்களும், நல்வினை அதிகமாக இருந்தால் சிவனின் தூதர்களும் வந்து அழைத்துச் செல்வார்கள் என்கிறது இந்து மதம். இங்கே 'அடுங்காலன்' என்பதால் தன்னுடைய தீவினைகள் அதிகம் என்று பட்டர் நம்புவதாக அறிஞர்கள் விளக்கம் சொல்லியிருப்பது பொருத்தமே.

'மரண அச்சத்தைப் போக்குகிறவள்' என்ற பொருளில் லலிதா சஹஸ்ரநாமத்தில் பலமுறை வணங்கப்படுகிறாள் திரிபுரசுந்தரி.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)