2010/07/23

இடங்கொண்டு விம்மி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 42 ராகம்: தன்யாசி


இடங்கொண்டு விம்மியிணை கொண்டிறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கைமலை கொண்டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கைநலம் கொண்டநாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குற் பனிமொழி வேதப்பரிபுரையே.

அனைத்து நலங்களும் பெற்று வேதங்களின் முதலும் சிறப்புமாக விளங்கும் தலைவியே! நல்ல பாம்பின் படம் போன்ற அலகுல், அழகிய முத்து மாலை படர்ந்த - இறுக்கமாகவும் மென்மையாகவும் ஒன்றுக்கொன்று இணையான குன்று போல் பருத்திருக்கும் - முலைகள், குளிர வைக்கும் இனிய குரல், இவற்றைக் கொண்டு, கல் போன்ற இறுக்கமான மனமுடைய சிவனையும் மயக்கி உன் எண்ணம் போல் ஆட்டி வைக்கும் குணமுடையவளாக விளங்குகிறாய்.

'வேதப்பரிபுரையே, நலம் கொண்ட நாயகி! நல்லரவின் படங்கொண்ட அல்குல், முத்து வடம் கொண்ட இறுகி இளகி இடம் கொண்டு விம்மி இணை கொண்ட கொங்கை மலை, பனிமொழி, கொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடம் கொண்ட கொள்கை' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் பாடலில் தொடங்கி மூன்றாம் பாடலில் கருத்தை முடிக்கிறார் பட்டர் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலிலும் அடுத்த பாடலிலும் அபிராமியின் அழகையும் குணத்தையும் ஏற்றிக் கூறி, மூன்றாம் பாடலில் வணக்கத்தைத் தெரிவிக்கிறார். மூன்று பாடல்களையும் சேர்த்துப் படித்தால் முழுக் கருத்தும் விளங்கும். தனித்துப் படித்தாலும் அபிராமியின் அழகை மட்டும் விவரிப்பது போன்ற பாடல்.

'வேதப் பரிபுரையே' என்பதற்கு அறிஞர்கள் 'வேதங்களைக் காற்சிலம்பாகக் கொண்டவளே' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஒரு வகையில் சரியென்றாலும், இந்தப் பாடலின் மையக் கருத்துக்கு ஒத்துப் போவதாகத் தோன்றவில்லை. பட்டர் இருக்கிறாரே, பொல்லாதத் தமிழர்! ஒரே சொல்லைப் பலவிதமாகப் பலபொருளில் பயன்படுத்தி நம்மையும் புரட்டியெடுக்கிறார். இந்தப் பாடலின் முடிவில் 'பரிபுரையே' என்று முடித்து விட்டு, அடுத்தப் பாடலை 'பரிபுர' எனத் தொடங்குகிறார். ஒரே சொல் போல் தோன்றினாலும், பரிபுரை என்பதும் பரிபுர(ம்) என்பதும் வெவ்வேறு பொருள் தரக்கூடியன. பரிபுரை என்பதை பரி+புரை எனப் பிரிக்க வேண்டும். புரை என்ற சொல்லுக்கான பொருளை முன்பே ஆய்ந்திருக்கிறோம். பரி என்பதற்கு அழகு, சிறப்பு என்றும் பொருள். பரிபுரம் என்றால் சிலம்பு. 'வேதங்களைக் காற்சிலம்பாக அணிந்தவளே' என்பது பொருத்தமாகத் தோன்றினாலும், பாடலின் கருத்துடன் பொருந்தவில்லை. இந்தப் பாடலின் முடிவை பரி+புரை எனப் பிரித்து வேதங்களின் முடிவும் (முதலும்) சிறப்பும் ஆனவள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். அபிராமியின் முலையையும் பெண்குறியையும் வர்ணித்து புலனளவில் வந்த கருத்தை, அவளே நெறிகளின் வடிவாகவும் சிறப்பாகவும் இருப்பவள் என அறிவளவில் உயர்த்தித் தொடர்வது இறையிலக்கியப் பெண் கடவுளர் வர்ணணை வழக்கங்களையும் ஒட்டி இருக்கிறது. வரும் பாடலின் தொடக்கத்தில் 'பரிபுரச் சீறடி' என்ற சொற்றொடர் சிலம்பணிந்த கால் எனப் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், வரும் பாடலில் கைகளில் வில் அம்பு என அபிராமியின் வெளித்தோற்ற அலங்காரங்களை விவரிக்கிறார் பட்டர்; காற்சிலம்பு அங்கே பொருந்துகிறது.

கடவுளரில் சிவன் மிகவும் கோபக்காரன், இறுமாப்புக்காரன், கல்நெஞ்சன் (சக்தியையே வெறுத்து அழியச் செய்தவன்; பெற்ற பிள்ளையை விரட்டியவன்) எனப் பலவாறாகக் கடினமான உள்ளம் படைத்தவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். அத்தகையவனை மயக்கித் தன் எண்ணம் போல் ஆட்டுவிக்கிறாள் அபிராமி என்பது பட்டரின் கருத்து. தன் உடலழகையும் அறிவழகையும் குரலழகையும் பயன்படுத்தி வலியவனை ஆட்டி வைக்கிறாள். கொங்கை அல்குல் இரண்டும் உடலழகையும், வேதம் அறிவழகையும், பனிமொழி குரலழகையும் உட்பொருளாகக் குறிக்கிறது. எல்லா அழகையும் பெற்று, தலைவனை ஆட்டி வைப்பவள் தலைவி தானே? உடல் உறுப்புகளின் வெளியழகோடு மட்டும் பார்க்காமல், அறிவு, மொழி என்று உள்ளழகோடும் பார்க்கின், பெண் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நிறைவானவள் என்பது பட்டரின் மறைபொருள்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)