2010/07/21

வாணுதற் கண்ணியை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 40 ராகம்: காம்போதி


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற் கண்ணிய ளல்லாத கன்னியைக் காணுமன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

தேவர் மூவரென விண்ணுலகத்தவர் அனைவரும் பணிந்து வணங்கிப் போற்றும் மஞ்சள் குங்குமத் திலகம் ஒளி வீசும் பரந்த நெற்றியை உடைய என் தலைவி, அழிவற்றவள்; நெஞ்சில் அறியாமை கொண்டவரை அணுகி அருள் புரியாதவள்; (அப்படிப்பட்டவளை) அன்புடன் வழிபடத் தோன்றியது என் நல்வினைப் பயனாகும்.

'வாணுதற் கண்ணி' என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். லலிதாசஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தர்யலஹரியில் ஒளி வீசும் நெற்றி, நெற்றிக் கண் இரண்டு விதத்திலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறாள் சக்தி. சிவனுடைய நெற்றிக்கண்ணே சக்தி தான் என்றும் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சௌந்தர்யலஹரியிலும் அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது ("சிவனுடைய கண்ணின் கனலானவள்").

பட்டரின் சொல்லாட்சியை ரசிப்போம். 'தேவரையும் மூவரையும் பெற்றவள், சிவனுடன் பலவிதங்களில் காமப்போர் புரிபவள்' என்றெல்லாம் முன்பு சொல்லிவிட்டு இங்கே அபிராமியைக் கன்னி என்கிறாரே பட்டர்? கருணையுடையவள், எளியவருக்கும் அருள் புரிபவள் என்று முந்தைய பாடல்களில் சொன்னவர், இங்கே அபிராமியை எளிதில் காணமுடியாதவள் என்பானேன்? கன்னி என்ற சொல்லுக்கு அழிவில்லாத, எல்லாவற்றுக்கும் தொடக்கமான என்று பொருளுண்டு. அபிராமி அழிவில்லாதவள் என்பதால் கன்னி என்றார். அபிராமி எல்லாவற்றுக்கும் தொடக்கம் என்பதால் கன்னி என்றார். அழிவில்லாத தொடக்கம் தானே அந்தாதி? அழிவில்லாத தொடக்கமான அபிராமிக்குப் பொருத்தமாக அந்தாதி பாடியவர் இன்னொரு நுட்பத்தையும் தெரிவிக்கிறார். பேதமை என்றால் அறியாதிருத்தல் என்று பொருள். பெண்ணுக்குப் பேதை என்று ஒரு பொருள் உண்டு. பெண்கள் அறிவில்லாதவர்கள் என்று பொருள் அல்ல. சிலவற்றை அறிந்தும் அறியாதவர் போல் காரணம் தொட்டு நடந்து கொள்வதால் பெண்களுக்குப் பேதை எனும் பொருள் வழங்கலாயிற்று. தேவர்களும் கடவுளருமே பணிந்து வணங்கும் அழிவில்லாத அபிராமியை அறிந்தும் நம்பிக்கையிழந்து அறிவில்லாதவர் போல் நடந்து கொள்ளும் பேதைகளுக்கு அபிராமியின் அண்ணியம் கிடைக்காது என்பதால், 'பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள்' என்றார் பட்டர். அண்ணுதல் என்றால் நெருங்குதல்; அண்ணித்தல் என்றால் அருளுதல். அண்ணியம் இரண்டுக்குமே பெயர்ச்சொல்.

மூன்றாம் சுழியை இத்தனை முறை ஒரே பாடலில் பார்த்ததில்லை. மூன்று சுழி 'ண' முடிவில்லாததையோ நிரந்தரத்தையோ பேரானந்தத்தையோ குறிப்பதாக நம்பப்படுகிறது. கண், மண், பெண், விண், பண் என்று 'ண' இடம்பெறும் தமிழ்ச் சொற்களைக் கவனித்தால் இது உண்(!)மையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அளவில்லாதவள், எல்லாவற்றுக்கும் தொடக்கமானவள், அழிவில்லாதவள் என்று அபிராமியை ஏத்தும் பட்டர், ணகரத்தை மிகையாகப் பயன்படுத்தியது காரணத்தோடா, தற்செயலா? பாடலின் இருபது சீர்களில் மொத்தம் 19 முறை மூன்று சுழியைப் பயன்படுத்தியிருக்கிறார். நான்கு அடிகளில், ஒவ்வொரு அடியிலும், குறைந்தது மூன்று முறையாவது மூன்றாம் சுழியைப் பயன்படுத்தியிருக்கிறார். முதற்சீரில் எதுகை அமையப் பாடுவதே சிறப்பு தான்; அடுத்தடுத்த சீர்களில் எதுகையைப் புகுத்திப் பாடியிருப்பது பெரும் சிறப்பு - அதுவும் ணகர எதுகை! அபிராமி அந்தாதியின் நூறு பாடல்களில், பத்து பாடல்கள் ணகர எதுகையில் அமைந்திருக்கின்றன. (மற்ற எழுத்து எதுகைகளை விட ணகர எதுகையில் பாடல்கள் அதிகமா என்று ஆய்ந்து பார்கக் வேண்டும்)

த, ர, ம, க, ப, ந, ன, ல போன்றவை எதுகைக்கு ஏற்றவை - நிறைய தமிழ்ச்சொற்களில் அவை இரண்டாம் எழுத்தாக அமைந்திருப்பதால். மூன்றாம் சுழி இருக்கிறதே - கொஞ்சம் சிரமம். ஆனால் சுவையான அழுத்தமுடைச் சொற்களைக் கொண்டது. (கண், பெண், மண், பண் என்று ஒரு பேச்சுக்கு - பொதுப்படையாக - எழுதினால், தேடிப் பார்த்த போது அதே எதுகையில் பட்டர் ஒரு பாடலைத் தந்திருக்கிறார்!). ஒரு பாடலின் ணகர எதுகை முதற்சீர்ச் சொற்களைப் புரட்டிப்போட்டு, இன்னொரு பாட்டில் அமைத்திருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அதே சொல் என்றாலும் வேறு ஒரு பொருளில் அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. 'கண்ணி' என்ற சொல்லை கண்ணியள் (கண்ணை உடையவள்) என்று ஒரு பாடலில் பயன்படுத்திவிட்டு, அதே சொல்லை இன்னொரு பாடலில் கண்ணியம் (மேன்மை) என்று பயன்படுத்தியிருக்கிறார் பட்டர்.

தோண்டினால் இன்னும் ஏதாவது தோன்றும்; இந்தப் பாடல் தமிழ்ச்சுவைக்கொரு கேணி.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)