2010/06/26

தண்ணளிக்கு என்று...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:15 | ராகம்:சாவேரி


தண்ணளிக்கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமளயாமளைப் பைங்கிளியே.

சிவ-சக்தி வடிவில் என்னைப் பாதுகாக்கும் யாமள தந்திரத்தின் உருவே! உன் அருளின் குளிர்ச்சியைப் பெற வேண்டி முற்பிறவிகளிலிருந்து பல கோடித் தவங்களைச் செய்து வருபவர்கள், மண்ணுலகத்தில் பெறக்கூடிய செல்வங்களையா விரும்பிப் பெறுவார்கள்? தேவர்கள் இருக்கும் விண்ணுலகத்தில் பெறக்கூடிய செல்வங்கள் கூட நிறைவு தராது. உன்னை எண்ணி உருகி நல்ல பண் பாடிப் போற்றுவதன் பலனாகக் கிடைப்பது, என்றைக்குமே அழியாத ஆனந்தமான, பிறவியில்லாப் பெரும்பேறு அல்லவா? அழகிய கிளி போன்றவளே! நீயே சொல்.

'யாமளை! தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார், மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் மதி. அழியா முக்தி, வீடும் அன்றோ பரிமளப் பண்ணளிக்கும்? பைங்கிளியே, சொல்' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் சொன்ன விளக்கங்களின் உரு பின்வருமாறு:     பச்சைக் கிளியின் இசை போல் இனிய சொல்லுடைய, நறுமணம் வீசும் கரிய/பசுமை நிறத்தவளே! உன் திருவருளை வேண்டிப் பலகோடித் தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? வானுலகத்து இந்திர பதவியும் விண்ணுலகச் செல்வங்கள் அத்தனையும் பெறுவர். அழியாத முக்திப் பேற்றையும் பெறுவர்.

தண்ணளி என்றால் அருள். 'தண்ணளிக்கு என்று' என்பது 'அருள் வேண்டி' என்ற பொருளில் வருகிறது.

இது வரை சிவப்பு நிறத்தின் அத்தனை உவமைகளையும் பயன்படுத்திய பட்டர், இந்தப் பாடலில் அபிராமியை வேறு நிறத்தவளாய்ப் பாடியிருப்பார் என்று தோன்றவில்லை. அபிராமியின் அழகையும் அண்டத்திற்கப்பாற்பட்ட ஆற்றலையும் பாடிக்கொண்டிருந்தவர், அபிராமியைக் கிளி போல் பேசுவதாக/பாடுவதாகச் சொல்லியிருப்பார் என்றும் தோன்றவில்லை. 'பண்ணளிக்கும் சொல்' அபிராமியின் குரலினிமையைக் குறிப்பதாகத் தோன்றவில்லை.

இங்கே பண்ணளிப்பது பைங்கிளி அல்ல, பட்டர் என்பதை மட்டும் கருத்தில் கொள்வோம். பைங்கிளியைப் பற்றி விவரமாக அடுத்த பாடலில் பார்ப்போம்.

யாமளை என்கிறாரே? யாமளை என்றால் கரிய நிறத்தவள் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'கரிய நிறத்தில் கிளி போல் பேசுபவளே' என்பதை எப்படி நல்லுவமையாகக் கொள்வது? "அட, அப்படியேவா பொருள் கொள்ளுவார்கள்? இரண்டும் வெவ்வேறு சிறப்புகளைக் குறிக்கும் உவமைகள் என்று தெரியாதா?" எனலாம். ஏற்க முடிகிறது. அல்லது, இங்கே யாமளை என்றதற்கு வேறு காரணம் உண்டா?

அமாவாசையன்று நிலவு வரும் என்று நிரூபிக்க, வேறு வழி தெரியாமல் அபிராமியை எண்ணி வரிசையாகப் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் பட்டர். முன்பே சொன்னது போல், நிலவு தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் அவருக்கு அபிராமி தான் கதி என்று ஐயமின்றித் தெளிவாகிறது. இந்த நிலையில், யாமளை என்ற சொல்லுக்கு நிறத்தைப் பொருளாகக் கொள்ளத் தோன்றவில்லை.

சிவன்-சக்தி முற்றிலும் கலந்த வரையறுப்புக்கப்பாற்பட்ட நிலைக்கு யாமளை என்று வேத விளக்கங்களில் பெயர் சொல்லியிருக்கிறது. சிவனுக்கும் சக்திக்குமிடையே நிகழ்ந்த உரையாடலில் தோன்றிய அறுபத்து நாலு (எழுபத்தேழு என்கிறார்கள் சிலர்) ஆகமங்களின் முப்பெரும் பிரிவுகளில் ஒன்று யாமள சாஸ்திரம் அல்லது தந்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தந்திரத்தின் அவசியமும் பொருளும் 'முறையான விவரங்களுடன் கூடிய விவரமான விசாலமான பாதுகாப்பு' என்று சொல்லப்பட்டிருக்கிறது. சக்தியே தந்திரத்தின் அன்னை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றைய நிலையில் பட்டருக்கு விசாலமான பாதுகாப்பு அளிக்கக் கூடியவர் அபிராமி ஒருவரே என்று அவர் நம்பியதால், யாமளை என்றார் என்பது என் கருத்து. மேலும், பட்டருக்கு வேறு எந்தச் செல்வத்திலும் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை; காரணம், பாட்டுக்குப் பாட்டு பிறவா நிலை பற்றியது. அதனால், 'மண்ணுலக, விண்ணுலகச் செல்வங்களுக்கா உன்னை எண்ணித் தவம் கிடக்கிறேன்? பிறவா நிலை வழங்கி என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்' என்று உருகிப் பாடுவதாகத் தான் நினைக்கிறேன்.

பரிமளம் என்றால் நறுமணம். இங்கே பரிமளப் பண் என்பது தமிழ்ப் பாட்டைக் குறிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டேன். தமிழின் நறுமணம் பட்டருக்குத் தெரிந்திருக்கிறது; அவர் வணங்கிய பார்வதிக்கும்.

பாடுவோர் பாடினால் பரிமளம்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 16 | கிளியே கிளைஞர்...