2010/07/29

சுடருங் கலைமதி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 48 ராகம்: நாயகி


சுடருங் கலைமதித் துன்றுஞ் சடைமுடிக் குன்றிலொன்றிப்
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடருந் தவிர்த்திமைப் போதிருப்பார் பின்னும் எய்துவரோ
குடருங் கொழுவுங் குருதியுந் தோயுங் குரம்பையிலே.

குன்றெனக் கட்டிய சடைமுடியில் ஒளி வீசும் பிறை நிலவைப் பொருத்திக் கொண்டிருக்கும் சிவன் மேல் நறுமணம் மிகுந்த பச்சைப் பூங்கொடி போல் படர்ந்திருப்பவளை, எந்தத் தடை வந்தாலும் கலங்காது ஒரு கணம் கூடத் தவறாமல் மனதில் நிறுத்தி எண்ணியிருப்பவர்கள், இனி இரத்தமும், சதையும், குடலும் கொண்ட கூடான இந்த உடலுக்குத் திரும்ப மாட்டார்கள்.

எளிமையான பாடல். துன்பமோ தடையோ எது வந்தாலும் கலங்காமல், நம்பிக்கையுடன் அபிராமியை மனதில் எண்ணி வழிபடும் அடியாருக்கு பிறவாமை கிடைக்கும் என்பதே பாடலின் சாரம். கொடிக்கம்பைச் சுற்றிப் படரும் கொடியைப் போல் அடியாரைச் சுற்றி வருபவள் அபிராமி என்பது உட்பொருள்.

கொழு இங்கே சதையைக் குறிக்கிறது. குரம்பை என்றால் கூடு, வீடு, இருப்பிடம். இங்கே உடலைக் குறிக்கிறது. குடர் = குடல். கலை என்றால் சிறுபகுதி என்று பொருளுண்டு. கலைமதி = பிறைநிலா.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)