2010/07/27

வெறுக்கும் தகைமைகள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 46 ராகம்: நாயகி


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.

நஞ்சை நெஞ்சில் நிறுத்தியதாலுண்டான கருநிற கழுத்தையுடைய சிவன் உடலின் இடது பாகத்தை ஏற்ற அழகிய பொன்னே அபிராமி! என்னுடைய எண்ணங்களும் செயல்களும் நீ விரும்பாதவையாக, நீ வெறுக்கக் கூடியவயாக, இருந்தாலும், உன் அடியார்களைப் பொறுத்து அருள்செய்யும் உன் குணம் எல்லோரும் அறிந்ததே; (என்னையும் மன்னித்தருள்வாய் என்பதை அறிந்ததால்) உன்னையே போற்றி வணங்கி வருவேன்.

அடியார்களை 'அஞ்சேல்' என்று அருளுவதாகவும், தவறு செய்யாமல் அன்றே தடுத்து ஆட்கொண்டதாகவும், 'என் குறையெல்லாம் நின் குறையே' என்று அபிராமியின் மேல் விளையாட்டுப் பழி போடுவதாகவும் பாடிய பட்டர், தவறு செய்தவனைப் பொறுத்தருளும் அபிராமியின் குணத்தைத் தொடர்ந்து பாடுகிறார்.

தவறு செய்தவர்களை வெறுத்து ஒதுக்குவதும் தண்டிப்பதும் சுலபம். என் போன்ற சாமானியர்களின் முதல் வேகம். ஐந்து வயது பிள்ளை அறியாமல் செய்தாலும், ஐம்பது வயது நண்பர் அறிந்து செய்தாலும், நானறிந்த ஒரே வழி கோபத்தில் கண் தெரியாமல் அறிவில்லாமல் அவர்களுக்கு இணையாக நடந்து கொள்வது தான். அறிவில் முதிர்ச்சியுடையோர் அப்படி நடந்து கொள்வதில்லை. எல்லோரையும் படைத்து காத்து அழிக்கும் அபிராமிக்கு அத்தகைய முதிர்ச்சி இருப்பதாகப் பட்டர் சொல்வதில் வியப்பேதுமில்லை. புதியதன்று. தான் செய்யும் தவறுகளைப் பொறுத்தருள வேண்டுமென்ற கோரிக்கையை அபிராமியின் அறிவையும் முதிர்ச்சியையும் காரணம் காட்டி முன்வைக்கிறார் பட்டர்.

இன்னொரு கருத்தும் உண்டு. எத்தனை தவறு செய்தாலும் 'தன் பிள்ளை' என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவள் தாய் மட்டுமே. எந்த மன நிலையிலும் தஞ்சம் பெறக் கூடியது தாயின் மனமும் மடியும் தான். தாயிற் சிறந்த கோவிலில்லை. அபிராமியைத் தாயாக எண்ணிப் பாடும் பட்டர், தன் பிழைகளைப் பொறுத்து அருளும் தன்மையை ஒரு தாயின் இயல்பாகக் கருதிப் பாடியிருக்கிறார். புதியதன்றே எனினும் எளியதன்று என்பதை அறிந்தவர்.

'அறிந்தும் அறியாமலும் பிழை செய்யும் தகைமையுடையவரை மன்னித்து நல்வழியில் சேர்ப்பவள் அபிராமி' எனும் பட்டர், இங்கே நஞ்சையுண்டவனை எடுத்துக்காட்டியதில் உட்பொருள் ஏதாவது இருக்கிறதா? "அம்மா தாயே... முப்பெரும் கடவுளரில் ஒருவராக பொறுப்பான பதவி கொடுத்து வைத்திருக்கும் உன்னுடைய கணவனான சிவன், ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் நாட்டியம் ஆடிக்கொண்டிருப்பது போதாதென்று சிறுபிள்ளைத்தனமாக விஷ்ணுவும் பிரம்மாவும் சொன்னர்கள் என்பதற்காக விஷத்தை லபக்கென்று விழுங்கிய பொறுப்பில்லாத்தனத்தை மன்னித்து, உயிர் பிழைக்கச் செய்து, திருத்தி, இனிமேலும் இளிச்சவாயனாக இருந்துவிடப்போகிறானே என்று உன் அருகில் வலதுபாகத்திலேயே வைத்துக் கொண்டாய். நான் உன் பிள்ளையல்லவா? அறியாமல் (அமாவாசையைப் பௌர்ணமி என்று அவசரத்தில் சொன்னது போல்) ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மட்டும் தவிக்க விடுவாயா என்ன? மாட்டாய். அதனால் உன்னைத் தொடர்ந்து வணங்குகிறேன்" என்று பட்டர் சொல்வது போல் உட்பொருள். "அந்தச் சிவனை நீ காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? உன் கணவன் என்பதாலா? இல்லை. சிவனும் உன் அடியாருள் ஒருவன் என்பதால் ஓடோடிச் சென்று அவன் செய்த தவறிலிருந்து அவனை மீட்டாய். நானும் உன் அடியாருள் ஒருவன். என்னையும் கொஞ்சம் கவனி" என்று பட்டர் சொல்வதாகவும் உட்பொருள் கொள்ளலாம். அரசனிடம் தவறான திதி சொன்னது அறியாமை; அப்படிச் சொல்ல வைத்தவள் அபிராமி என்று பட்டர் தீர்மானமாக நம்பியது அறிவு. ஆழ்ந்த நம்பிக்கை அறிவின் வெளிப்பாடு எனப்படுகிறது. (ஆழ்ந்த நம்பிக்கையின்மையும் அறிவின் வெளிப்பாடே. அறிவினால் தெளிவு ஏற்படுகிறது. தெளிவின் வடிவம் பல வகைப்படும். அரைகுறைத் தெளிவில் தான் ஆரவாரம். ஆழ்ந்த தெளிவில் என்றைக்கும் அமைதி காணலாம்).

தகைமை என்றால் குணம், செயல், எண்ணம். மிடறு என்றால் கழுத்து, தொண்டை. ஆலகால விஷத்தை அருந்திய சிவனின் அவசரத்தனத்தைப் பொறுத்து, சக்தி அதை சிவனின் கழுத்திலேயே நிறுத்தியக் கதையைப் புராணங்களில் படிக்கலாம். சிந்துரச் சுந்தரியும் சிவனும் இணைந்த அர்த்தநாரியின் கழுத்தில் கருப்பு-சிவப்பைக் கொண்டு வந்திருக்கிறார் பட்டர்.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்களை நாயகி ராகத்தில் பாடியிருக்கிறார், என்னுடைய தவறுகளையெல்லாம் பொறுத்தருளும் அபிராமி. கல்யாணி போல் ஒலிக்கும் இந்த ராகத்தில் நிறைய பாடல்களைக் கேட்டிருந்தாலும், நாயகி என்று தனி ராகம் இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)