2010/07/13

ஆசைக்கடலில் அகப்பட்டு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 32 ராகம்: சண்முகப்ரியா


ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே.

சிவனின் ஒரு பாகமாக விளங்கும் அழகிய அபிராமிப் பெண்ணே! இந்தப் பிறவியின் பந்தபாசத் தொடர்பினாலுண்டான கடல் போல் அளவில்லாத ஆசைகளுக்கு அடிமையாகி நான் செய்த செயல்களின் விளைவினால், கருணையில்லாத காலனின் கைப்பிடியில் சிக்கித் தவிக்க இருந்த என்னை, தக்க நேரத்தில் உன் மணமிகு தாமரை மலர்பாதங்களை நீயாகவே என் தலைமீது இட்டு என்னை நல்வழிப்படுத்திய உன் கருணையை எப்படிப் புகழ்ந்து பாடுவேன்?

ஆசையைக் கடலுக்கு ஒப்பிடுவானேன்? கரையில் நின்று கொண்டிருக்கிறோம். வெண்ணிற அலைகள் பட்டுத்துண்டுகள் போல் காலை வருடி விட வருகின்றன. 'வா' என்கிறது சிற்றலை; தூய நிறமுடைய அலையாயிற்றே, அழகாக இருக்கிறதே, உடலைத் தொட்டு கிளுகிளுப்பூட்டுகிறதே, மனதில் மகிழ்ச்சியூட்டுகிறதே... என்றெல்லாம் எண்ணிக் கால் வைக்கிறோம். 'இன்னும் கொஞ்சம் தூரம் வா, கால் என்ன உடலையும் வருடுகிறேன்' என்கிறது அலை (கடல்); குளிக்கிறோம். 'முத்து, மீன் என்று பலவற்றையும் கொள்ளலாம் வா' என்று இன்னும் இழுக்கிறது; இன்னும் போகிறோம். திடீரென்று ஆழத்தை உணர்ந்து, 'அடடா இந்த ஆழம் அப்போது வந்த அலையில் புரியவில்லையே!' என்று திரும்ப நினைக்கிறோம். தாமதமாகி விட்டது; கடலின் ஆழத்தில் தத்தளிக்கத் தொடங்கிவிட்டோம். ஆசை எனபதும் அப்படித்தான். ஆசையின் போர்வைக்குள் மறைந்திருப்பது அழகான விரல்கள் மட்டுமல்ல என்பதை உணரும் பொழுது நிறைய இழந்து விட்டதைப் புரிந்து கொள்கிறோம். கபடமில்லாமல் நம்மைக் கவரும் ஆசை மெள்ள நம்மைக் கயவனாக்க வல்லது என்பதை முதலில் அறிய இயலாததால், ஆசை கடலைப் போன்றது. ஆசைக் கடலில் மூழ்கினால் முத்தோ மீனோ எடுக்கப் போவதில்லை; இருப்பதையும் இழக்கப் போகிறோம் என்பதனால் - ஆசைக்கடலில் மூழ்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதால் - ஆசைக்குத் துன்பக்கடல் என்றும் பெயர். (துன்பக்கடலில் தோணி என்ற உவமையை இறையிலக்கியங்களில் அடிக்கடி காணலாம்).

அந்தகன் என்றால் எமன். எமன் அருளற்றவனா? எமனுக்கு அருளும் கிடையாது, வஞ்சமும் கிடையாது என்பார்கள். சமநிலையுடைவன் என்று கடவுளரில் எமனுக்கு ஒரு பெயர் உண்டு. அதனால் எமனை நீதிக்குத் தலைவனென்றும் பாடியிருக்கிறார்கள். தவறு செய்கிறோம். பெற்றோர், உற்றார், ஆசிரியர் என்று யாராவது நம்மை தண்டிக்கிறார்கள்; அந்த நேரத்தில் தண்டனை கொடுப்பவர்களுக்குக் கருணையே இல்லையா என்று நினைக்கிறோம். பட்டர் இங்கே சிறுபிள்ளை; தாயை எண்ணிக் கலங்குகிறார். அதனால் தண்டனை கொடுக்கும் எமன் கருணையற்றவனாகத் தோன்றுகிறான். அரசனை இங்கே அருளற்றவன் என்று தாக்குவதாகவும் நினைக்கிறேன். "அம்மா அபிராமி, அப்படியென்ன தவறு செய்து விட்டேன்? திருடினேனா? கொலை செய்தேனா? அமாவாசையைப் பௌர்ணமியென்றது அப்படியென்ன குற்றமாகி விட்டது? இதற்கு தலையை வெட்டுவேன் என்று சொல்லும் அரசனுக்கு கருணையே இல்லையா? இப்படிப்பட்ட கருணையே இல்லாதவனுக்குப் பணிந்து வாழ்வதும் ஒரு வாழ்வா?" என்பது உட்பொருள்.

தண்டனை கொடுப்பவர்களுக்கும் நிறைவேற்றுபவர்களுக்கும் கருணை கிடையாது என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஒரு இந்துமதக் குட்டிக்கதை.

இறந்தபிறகு எமனுலகம் சென்றானாம் ராமசாமி. எமனின் காரியதரிசியான சித்திரகுப்தன் ராமசாமியின் குற்றங்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொன்னதும் எமன், "ஐயா ராமசாமி... கொதிக்கும் எண்ணைக் குடுவைக்குள் தள்ளுவது தான் உங்களுக்குச் சரியான தண்டனை" என்றானாம்.

ராமசாமி எமனைப் பார்த்து, "ஐயா, தருமதேவரே, கொஞ்சம் பொறுங்க. என்னை உலகில் படைச்சது யார்?" என்று கேட்டானாம்.

"பிரம்மன் தான் படைக்கும் கடவுள்" என்றானாம் எமன்.

"அப்படின்னா அவர் தான் இந்தத் தவறுக்கெல்லாம் காரணம்; என்னைப் படைக்காமலிருந்தால் இந்த தவறுகளெல்லாம் நடந்தே இருக்காதே? அதனால அவருக்கும் இந்தத் தண்டனையில் பங்குண்டு" என்றானாம் ராமசாமி.

"ராமசாமி அவர்களே, நீங்கள் சொல்வது சரியாகத் தோன்றுகிறது; பையா, போய் பிரம்மனை அழைத்து வா" என்றானாம் எமன்.

பிரம்மன் வந்ததும் எமன் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி இன்னொரு எண்ணைக் குடுவை தயார் செய்யச் சொன்னானாம். பிரம்மன் உடனே, "இதென்ன கூத்து? எனக்குப் படைக்க மட்டும் தான் தெரியும். அது என் தொழில். என் தொழிலைச் செய்வது எப்படிக் குற்றமாகும்? காக்கும் தொழிலைச் செய்வது விஷ்ணு. அவர் தான் இதெல்லாம் நிகழாமல் ராமசாமியைக் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் பாதி நேரம் அங்கே இங்கே ஒளிந்து கொண்டு திருட்டு, ஏமாத்து வேலை, பெண்கள் பின்னால் சுத்துவது... என்பதே அவருக்கு வழக்கமாகி விட்டது. அவர்தான் இந்தக் குற்றங்களுக்கெல்லாம் பொறுப்பு" என்றானாம்.

"அப்ப விஷ்ணுவுக்கும் என் தண்டனையில பங்குண்டு தருமதேவரே" என்றானாம் ராமசாமி.

"மேதகு ராமசாமியாரே, சரியாகச் சொன்னீர்கள். பையா, விஷ்ணுவைக் கூட்டி வா" என்றானாம் எமன்.

விஷ்ணுவோ "சரியான எருமை மாடாக இருப்பீர் போலிருக்கிறதே? சிவன் தானய்யா இதற்கெல்லாம் காரணம். ஒரு வேலைக்கு லாயக்கில்லாமல் சும்மா ஆடிக்கொண்டிருக்கம் அந்த ஆளைக் கேளும். மாயையைக் கட்டுப்படுத்தி அழிக்கும் கடவுள் இந்த மாதிரி பாவங்களையெல்லாம் அழித்திருந்தால் பிரச்சினையே இல்லையே? சும்மா உலகத்தை அழிக்கிறேன்னுட்டு கடைசி வரைக்கும் நாட்டியம் ஆடுறது யாருக்கு தான் தெரியாது? இப்படியே விட்டுக்கிட்டு இருந்தா இவரு அழிப்பானேன்? உலகம் தானே அழிஞ்சு போகுமே? அதனால அவரைப் போய் கேளுயா" என்றானாம்.

"பையா, சிவனைக் கூட்டி வா, ஓடு ஓடு" என்றானாம் எமன்.

சிவன் வந்ததும் வழக்கம் போல் நெற்றிக்கண்ணைத் திறப்பதாக பயமுறுத்த, ராமசாமி தலையிட்டு "நிறுத்துங்க சிவனாரே. உங்க வேலையைச் செய்யாம நெத்திக்கண்ணைத் திறப்பேன்னு சொன்னா எப்படி? தாராளமா பாருங்க; எப்படியும் எண்ணைக் கொப்புறைல போடுவேன்னு சொல்லியிருக்காரு எமன், என்ன பெரிய நெத்திக்கண்ணு? நாட்டியம் ஆடுறதை நிறுத்திட்டு ஒழுங்காக வேலையைப் பாத்திருக்க வேணாம்?" என்றானாம்.

'என்ன இவன், நெற்றிக்கண்ணுக்குக் கூட அஞ்சமாட்டான் போலிருக்கிறதே?!' என்று சிவன் கொஞ்சம் சிந்தித்து விட்டு, "நாட்டியத்தை நிறுத்துறதா? எனக்கு உலகத்தை அழிக்க மட்டும் தான் தெரியும். இதற்கெல்லாம் காரணம் மற்ற கடவுள்கள்" என்று கல்வி, தொழில், திருமணம், செல்வம், இளமை, மூப்பு, வீரம், காதல், பிள்ளைப்பேறு, நிலம், அறுவடை, உணவு, உடை, பொன், பொருள் என்று வரிசையாக ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாகச் சொல்லப்படும் கடவுளரைச் சுட்டிக்காட்டி, "அவங்களையெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க; அப்ப நானும் நிறுத்துறேன்" என்றானாம் ஆவேசத்துடன்.

ஆக, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி முப்பத்து முக்கோடி தேவர்களும் எமனுலகம் வந்து விட்டார்களாம். அப்படியும் எவரும் எதற்கும் பொறுப்பேற்காமல் அவரவர் தொழிலைச் செய்வதாகவும், தொழில் தர்மம் குற்றமாகாது என்றும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். எமனோ நீதி எல்லோருக்கும் பொது என்று தீர்மானமாக இருந்தானாம். அத்தனை பேருக்கும் எண்ணைக் குடுவைகளுக்கு எங்கே போவேன் என்று எமன் தலையில் கை வைத்து உட்காரவும், கூச்சல் பொறுக்காத ராமசாமி எமனைப் பார்த்து, "என்னய்யா, இங்கே வந்தும் பெரிய தலைவலியா போச்சு!...இந்தாய்யா எமன், ஏன்னு கேட்டா எல்லாரையும் குற்றவாளினு கொண்டாந்துட்டே நீ.. இவங்கள்ள யாரும் எதுக்கும் பொறுப்பேத்துக்குவாங்கன்னு தோணலை... இவங்களுக்கு எண்ணைக் குடுவையே மேல். நல்லா சூடு பண்ணச்சொல்லு, குதிக்கிறேன்' என்றானாம்.

விலகிச் சென்றதற்கு மன்னியுங்கள். பட்டர் பாடலுக்குத் திரும்புகிறேன்.

ஈசன் என்றால் கடவுள் என்று பொதுவாக வழங்கப்பட்டாலும், அது சிவனைக் குறிப்பதாகும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றைக் குறிப்பதாகும் (வடகிழக்கு பார்த்த முகம்). இங்கே ஈசர் பாகத்து நேரிழை (பெண்), அர்த்தநாரி வடிவத்தைக் குறிக்கிறது. இந்தப் பாடல் 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்' என்ற குறளை நினைவூட்டுகிறது.

அபிராமி அந்தாதி பற்றி இணையத்தில் நிறைய விளக்கங்கள் கிடைக்கின்றன. இறையிலக்கியங்கள் பற்றி நிறைய எழுதி வரும் திரு.குமரன் அவர்களின் அபிராமி அந்தாதி வலைப்பூ பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். அவருடைய வலைப்பூவின் சிறப்பு, எளிமையான விளக்கங்கள் மட்டுமல்ல மெய்சிலிர்க்க வைக்கும் சித்திரங்களும் கூட. எங்கே பிடித்தார் படங்களை என்று தெரியவில்லை. குமரனின் பதிவில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கான விளக்கமும் படமும் அருமை.

தவறு செய்தோமென்று வையுங்கள்; உலகில் நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் நம்மைக் குற்றவாளி என்ற நோக்கத்தில் தான் பார்ப்பார்கள் - ஒருவரைத் தவிர. தாய். தாய் மட்டும் 'தன்னுடைய சேய்' என்பதை முதலில் நினைத்து, பிறகே குற்றத்தின் சுமையைக் கணக்கிடுவாள். எத்தகைய குற்றம் கோபம் வெறுப்பு இருந்தாலும், தானாகவே வலிய வந்து அணைப்பவள் தாய் மட்டும் தான். அதனால் பட்டரும் அபிராமியைத் தாயாகப் பார்த்து "வலிய வந்து என்னை நல்வழிப் படுத்த அருள் செய்தாய், உன் கருணையை எப்படிப் புகழுவேன்?" என்றார். அபிராமி பட்டரின் தாயானாலும் சரி, அப்பாதுரையின் தாயானாலும் சரி, அத்தனை பேரின் தாயானாலும் சரி.. தாயின் கருணையைப் பாட எந்த மொழியிலும் சொல்லும் பொருளும் போதாது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)