2010/07/31

நாயகி நான்முகி...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 50 ராகம்: நாயகி


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆயகி ஆதியுடையாள் சரணமரண் நமக்கே.

உலக நாயகி, பிரம்மா-விஷ்ணு-சிவன் எனும் முக்கடவுளரின் சக்தி, கைகளில் ஐந்து வகை மலரம்புகள் கொண்ட தலைவி, கருணையுள்ள சங்கரி, பாதுகாப்பளிக்கும் யாமளை, நாகதேவி, கங்கை, பன்றிமுக விஷ்ணுவின் சக்தி, கைகளில் சூலம் ஏந்திய காளி, இனிய யாழிசைக்கும் மாதங்கி, என்று பல அவதாரங்களாக விளங்கும் எல்லாவற்றுக்கும் முதலும் முடிவுமானவளைப் பணிவதே எமக்கு உகந்த பாதுகாப்பு.

அசல் உலக நாயகி அபிராமி தான் என்கிறார் பட்டர். ஹயக்ரீவர் சொன்ன லலிதா சஹஸ்ரநாமம் போல இது பட்டர் சொன்ன பார்வதி பனிரெண்டு நாமம். ஒரு குட்டி அர்ச்சனை செய்து விட்டார். விவரம் உட்பொருள் என்று அதிகமாக நம்மைச் சீண்டாத எளிய பாடல்.

மாதங்கி என்பவள் மதங்க முனிவரின் பெண்ணாக சக்தி எடுத்த அவதாரம். மதங்க முனிவரின் பின்னே ஒரு மனதைக்கவரும் கதை இருக்கிறது. யாழ்ப்பாணம் எனும் அழகிய தமிழ் நகரத்தின் பின்னணியை மதங்க முனிவரின் கதையில் தெரிந்து கொள்ளலாம். மதுரையைப் போல் யாழ்நகரமும் எத்தனையோ காலமாக தமிழ்ப்பண் பாடியிருக்கிறது. இறையிலக்கியமானாலும் வரலாற்றுப் பின்னணி. இன்றைய யாழ்நகரத்துக்கும் மாதங்கியார் துணை. (மாதங்கி, யார் துணை?)

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)