2010/07/25

தவளே இவளெங்கள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 44 ராகம்: தன்யாசி


தவளே இவளெங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையு மாயின ளாகையினால்
இவளே கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியுமாம்
துவளே னினியொரு தெய்வமுண்டாக மெய்த்தொண்டு செய்தே.

எமது இறைவனாகிய சங்கரனின் துணைவியாகவும் தாயாகவும் இருக்கும் தூய்மையான இவளே (அபிராமியே) அனைத்துக் கடவுளர்க்கும் மேன்மையான இறைவியாவாள் (என்பதை அறிந்து) அவளுக்கு உண்மையான தொண்டு செய்வதிலிருந்து தளர மாட்டேன்; இன்னொரு தெய்வத்தைப் பணிய மாட்டேன்.

'இடம் கொண்டு விம்மி' என்ற பாடலில் தொடங்கிய கருத்தோட்டத்தை 'பரிபுரச் சீறடி' பாடலில் தொடர்ந்து, இந்தப் பாடலில் முடிக்கிறார். அந்த இரண்டு பாடல்களிலும் அபிராமியை வர்ணித்தக் காரணம் தொக்கி நிற்பதை, இப்போது மீண்டும் படித்தால் புரிந்து கொள்ளலாம். அபிராமியின் உடலழகையும் உள்ளழகையும் முதல் பாடலில் வர்ணித்தார்; அபிராமியின் சக்தியையும் வீரத்தையும் சிவனுக்கு உதவியதையும் 'பரிபுரச் சீறடி' பாடலில் வர்ணித்தார். 'அழகும், வீரமும், விவேகமும் பொருந்திய அபிராமி சிவனுக்கு மட்டும் அன்னையல்ல, எனக்கும் தான்; சிவனுக்கும் மட்டும் கடவுள் அல்ல, எல்லாருக்கும் கடவுள்' என்று சொல்ல வந்த கருத்தை இந்தப் பாடலில் முடிக்கிறார். மூன்று பாடல்களையும் தொடர்ந்து படித்தால் இந்தப் பொருள் விளங்கும்.

தவளே என்பதற்கு தவம் செய்தவளே என்றும், தாயே என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள். தவளே என்று ஒரு நேர்ச்சொல் நானறிந்ததில்லை (தவளையை அழைப்பதாக இருந்தாலொழிய :-). உரிச்சொல் என்று நண்பர் அரசர் சொன்னார். தவளம் என்பது வெண்மை, தூய்மையைக் குறிக்கும் சொல். சக்தி சிவனுக்கு மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் என்று பட்டர் எண்ணுவதால், மனைவியும் அன்னையும் அவளே என்ற நெருடலான கருத்து தூய்மை என்ற கண்ணோட்டத்தில் நல்ல விளக்கமாகி விடுவதால், தவளே என்பதற்குத் தூய்மையானவள் என்று பொருள் சொல்லியிருக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)