2010/07/18

கைக்கே அணிவது...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 37 ராகம்: காம்போதி


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விடவரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டுமெட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே.

கைளில் கரும்பையும் மலர்களையும், தாமரை மலர்கள் போன்ற முலை மேல் வெண் முத்து மாலையையும், விஷப்பாம்பின் படம் போன்ற அல்குலைச் சுற்றிப் பலவகை மணிகளையும் பட்டாடையையும் அணிந்து சிறப்பு மிகுந்த சிவபெருமானின் இடது பாகத்தில் சேர்ந்திருக்கும் நீயே எட்டுத் திக்கையும் அணிந்திருக்கிறாய் (பாதுகாக்கிறாய்).

'எட்டுத் திக்கையும் ஆடையாக அணிந்த சிவபெருமானின் இடது பாகத்தை ஏற்றவளே' என்றும் 'எட்டுத் திக்கையும் ஆடையாக அணிந்திருக்கும் சிவபெருமானுடன் சேர்ந்து இருப்பவளே' என்றும் அறிஞர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

கன்னல் என்றால் கரும்பு. மெய் என்ற சொல்லுக்கு உடல், முலை என்று பொருள். பை என்றால் படம் பிடித்து ஆடும் பாம்பு, அழகு, இளமை, பெண்குறி (உருவகம்), அல்குல் என்று பொருள்.

முந்தைய பாடலில் சிவ-சக்தி இணைப்பை 'ஆயிரந்தாமரை' யோகப் பொருளில் பாடிய பட்டர், இந்தப் பாடலில் அபிராமியின் உள்ளழகைத் தொடர்ந்து பாடுகிறார். படமெடுத்து ஆடும் பாம்பின் நிலை பெண்குறிக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருப்பதை, பல இந்துமத இறையிலக்கியங்களில் பார்க்கலாம். இங்கே விஷப்பாம்பு என்ற சொல்லை உபயோகித்திருப்பது, விஷங்கொண்ட பாம்புகளே பொதுவாகப் படமெடுத்து ஆடக்கூடியன என்பதால். இன்னொரு சுவையான சிருங்காரக் கற்பனையும் இங்கே பொருந்தும். சிவனுடைய கழுத்து விஷங்கொண்ட பாம்பு போல் இருக்கிறது; பொருத்தமாக சக்தியின் காலிடை விஷங்கொண்ட பாம்பு போல் இருக்கிறது. இது போன்ற கருத்துக்கள் சௌந்தர்யலஹரியில் பாதிப் பாடல்களுக்கு மேல் வருகிறது. 'உன் தொப்புளுக்குக் கீழே இருக்கும் குகை சிவனுக்கு விருப்பமானது' என்று கூட வர்ணித்திருக்கிறார் சங்கரர். பெண் கடவுளரின் உடலழகை ஒரு பகுதி விடாமல் வர்ணித்து, மனங்கலங்காமல் பக்தியுடன் வணங்குவது பாராட்டுக்குரிய முதிர்ச்சி. பட்டரும் சங்கரரும் சங்கடப்படாமல் உள்ளதை உள்ளபடி முலை, அல்குல் என்று சொல்லியிருக்கும் பொழுது, பாடலுக்கு பொருள் சொன்ன அறிஞர்கள் இடை தொடை இடுப்புப்பகுதி என்றும், இன்னும் குழப்பும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியும், சங்கடப்பட்டிருப்பது சுவையான வேடிக்கை. பக்தி எனும் ஒளியேற்றி முக்தி எனும் பேரின்ப நினைவுடன் சக்தியை வழிபடுவதால், குயுக்தி என்ற இருள் புகாமல் மனது கட்டுப்பட்டு இருக்கிறது என்று ஒரு சங்கராச்சாரியார் விளக்கத்தை படித்திருக்கிறேன். ஏற்க வேண்டிய கருத்து.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)