2010/07/19

பவளக் கொடியில்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 38 ராகம்: காம்போதி


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா மெங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

நெருக்கமாக இணைந்த முலைகளைத் தாங்கும் உடுக்கை போன்ற இடை துவளும்படி சிவபெருமானுடன் காதல் போர் புரிகிற அபிராமியின் பவளப்பழம் போன்ற சிவந்த உதடுகளில் மிளிறும் குளிர்ச்சியான வெண்ணிறப் புன்னகை (கொண்ட முகமே) துணையென்றுப் பணிந்து வணங்கினால் தேவருலகத்தில் அரச பதவி கிடைக்கும் (என அறிவோமாக).

பவளக் கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும் என்கிறார் பட்டர்.

உதடுகளைப் பவளக் கொடியில் பழுத்த பழம் என்பது சுவையான கற்பனை. பனிமுறுவல் - குளிர்ச்சியான புன்னகை. தவளம் என்றால் வெண்மை. செவ்வாய் என்பதை செம்மை+வாய் எனப்பிரித்து சிவந்த வாய் என்றோ, சூடான வாய் என்றோ பொருள் கொள்ளலாம். இணைந்த கொங்கையுடனும் துடியிடையுடனும் சிவனுடன் காதல் போர் புரியும் அபிராமியின் உதடுகள் வெப்பத்தினால் சிவந்திருப்பதாகக் குறிப்பதாகக் கொள்ளலாம். வெப்பமான உதடுகள் எனும் பவளப் பழத்தைப் பிளந்தால் குளிர்ச்சியான புன்னகை என்பது, சுவைக்குச் சுவை சேர்க்கும் கற்பனை.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)