2010/09/21

அந்தம்

நூறு நாளில் அபிராமி அந்தாதி: நிறைவு

இந்திரா வெங்கடசுப்ரமணியன் குரலில் அபிராமி அந்தாதி முழுமையும் கேட்க:


காணிக்கை
அபிராமி அந்தாதிப் பாடல்களை முப்பது வருடங்களுக்கு மேலாக என் அம்மா பாடிக் கேட்டிருந்தாலும், ஒலிப்பதிவு செய்தது என்னவோ சமீபத்தில் தான். அசல் அபிராமவல்லி மட்டுமே துணை என்று கோவிந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அம்மா, அபிராமி அந்தாதி பாடல்களை அண்மையிலிருப்போருக்குக் கற்றுத் தருகிறார். அவர்கள் தினமும் கேட்டுப் பாடிப் பழக உதவியாக இருக்குமே என்று என்னை இந்த உருப்படியான காரியம் செய்யச் சொன்னார். இசைத்தட்டாக ஒலிப்பதிவு செய்து கொடுத்தப் பாடல்களை, இணையத்தில் வெளியிடச் சொன்னவள் என் சகோதரி.

கோவிந்தபுரத்தில் பகல் முழுதும் பறவைகளும் கோவில் பூசையும் பிற ஒலிகளும் கேட்டுக்கொண்டே இருப்பதால், தெருவடங்கிய இரவு நேரத்தில் ஒலிப்பதிவு செய்தேன். தேவையான ஒலிப்பதிவுக் கருவிகள் எதுவுமில்லாமல் கணினியில் ஒலிப்பதிவு செய்த சிரமம் பாடலில் தெரியாமல் இருப்பது என் அம்மாவின் குரல் வளத்தினால். அபிராமியின் அருளினால் என்கிறார் அம்மா. தினம் சில பாடல்கள் என்று தொடர்ந்து ஒரு வாரம் போல் பொறுமையாகப் பாடிக் கொடுத்தார் அம்மா. அவருக்கு இணையாக, சில பாடல்களில் என் பாட்டியின் மெல்லிய குரலைப் பின்னணியில் கேட்கலாம். (எங்கள் அம்மாவைப் பெற்ற அபிராமி - சித்தி என்போம்). அசல் அபிராமியை விட அன்பும் கருணையும் கொண்டவர்கள் எங்கள் குடும்ப அபிராமிகள் என்று நினைக்கிறேன்.

இந்தப் பதிவுத் தொகுப்பு என் அம்மாவுக்கும், சித்திக்கும் காணிக்கை.

நன்றி
தொடர்ந்து படித்து வந்த உங்களுக்கு நன்றி. 'அபிராமி அந்தாதியைப் பொருளுடன் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என்று நேரிலும் மின்னஞ்சலிலும் மனமுவந்து பாராட்டியவர்களுக்கு நன்றி. இன்ட்லி திரட்டி வழியாகத் தொடர்ந்தவர்களுக்கு நன்றி. அவசரத்தாலும் என்னுடைய அறியாமையாலும் ஏற்பட்டப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்த வைத்தவர்களுக்கு நன்றி.

மேலும் படிக்க:
• திருமதி. தேவகி முத்தையா எழுதியிருக்கும் அபிராமி அந்தாதி விளக்கவுரை
• கண்ணதாசன் எழுதிய அபிராமி அந்தாதிப் பொருளுரை
• இணையத்தில் நண்பர் குமரன் பதிவுசெய்திருக்கும் அபிராமி அந்தாதிப் பொருளுரை - அவருடைய பதிவில் சேர்த்திருக்கும் படங்கள் அற்புதம்
• வீரைக் கவிராயரின் சௌந்தர்யலகரி தமிழாக்கம்
• இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருக்கும் கிளைக்கதைகளை சிவபுராணம், கந்தபுராணம், பாகவதம் மற்றும் ராமாயண நூல்களில் விவரமாகப் படிக்கலாம்