2010/09/09

வருந்தா வகை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 90 ராகம்: ரஞ்சனி


வருந்தா வகை என்மனத் தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தா தொரு பொருளிலை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியளே.

கடலையும் அமுதாக்கி தேவர்களுக்கு வழங்கும் மென்மையான மனமுடையவள் (அபிராமி), என் மனமென்னும் தாமரையைத் தனக்குப் பழக்கமான இருப்பிடம போல் எண்ணிக் குடிபுகுந்திருப்பதால் இனி எனக்கு வேண்டியது வேறு எதுவும் இல்லை.

'விண்மேவும் புலவர்' இங்கே தேவர்களைக் குறிக்கிறது. வேலை என்றால் கடல். 'வேலை மருந்தானது' இங்கே பாற்கடல் கடைந்த அமுதத்தைக் குறிக்கிறது.

வேலை மருந்தாக்கியதை உவமையாகச் சொல்லியிருப்பது சுவையானது. பாற்கடலின் சிறப்பு எப்படி வெளிப்பட்டது? அதிலிருந்த அமுதத்தினால். அமுதம் இல்லையென்றால் பாற்கடல் சாதாரணக் கடல் தான். 'எந்தச் சிறப்பும் இல்லாத பாழ்கடலான என் மனதில் அமுதம் போல் அபிராமி குடியிருக்கிறாள் - அதனால் என் மனதுக்கும் சிறப்பு வந்துவிட்டது' என்று பட்டர் புளங்காகிதம் அடைகிறார். அதன் வெளிப்பாடே இந்தப் பாடல்.

அபிராமியை அடைக்கலம் என்று எண்ணியவர், எண்ணி உருகியவர், உருகித் துதித்தவர் இனி எதுவுமே தேவையில்லை என்கிறார். தன் மனதில் அபிராமி குடியேறிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார். கடவுளே மனதில் குடியிருக்கும் பொழுது மனம் வேறு என்ன நினைக்க வாய்ப்பிருக்கிறது?

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)