2010/09/07

பரமென்று உனை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 88 ராகம்: ரஞ்சனி


பரமென்று உனை அடைந்தேன் தமியேனுமுன் பத்தருக்குள்
தரமன்று இவன் என்று தள்ளத்தகாது தரியலர்தம்
புரமன்று எரியப் பொருப்புவில் வாங்கியபோதில் அயன்
சிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே.

பகைவர்களான அசுரர்களின் திருபுர நகரங்களை எரிக்க மலையை வில்லாக ஏந்திய, தாமரை மேல் அமர்ந்த பிரம்மனின் தலைகளுள் ஒன்றைக் கொய்த, கைகளுக்கு சொந்தக்காரனான சிவனுடைய இடப்பாகத்தில் இருக்கும் உயர்ந்தவளே (அபிராமி), உன்னையே அடைக்கலம் என்று நம்பி வந்த எளியவனான என்னை உன் அடியவனாகத் தகுதி இல்லாதவன் என்று ஒதுக்கி விடாதே.

அந்தாதி பாடி அபிராமியை வரவழைத்து விட்டார். நிலவும் வந்துவிட்டது. தான் வர்ணித்தபடியே அபிராமி தனியாகவும் அர்த்தனாரியாகச் சிவனுடனும் தோன்றிய காட்சிகளைக் கண்டாகி விட்டது. எங்கேயும் ஒளிப்பிழம்பாகி நின்ற அபிராமியுடன் சேரக் கிடைத்த வாய்ப்பையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். எமனை உதை வாங்கச் செய்த ஒரு உபரித் திருப்தியும் கூடக் கிடைத்தாகி விட்டது. பட்டருக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை அபிராமி மனம் மாறி தன்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால்? அல்லது தன் பக்தியில் குறை கண்டு ஒதுக்கி விட்டால்? அபிராமியையே கதி என்று நம்பியவரின் கைக்கெட்டிய பிறவாமை தட்டி விட்டால்? பட்டரின் தன்னம்பிக்கையில் குறையில்லை. அபிராமியின் கண்ணோட்டத்தில் மாறுபட்டால்? சாதாரண கிரிகெட் போட்டியில் கடைசி ஓவரில் நாலு பந்துகள் பாக்கி, ஒரே ஒரு ரன் அடித்து வெற்றி கிடைக்கும் போலிருக்கும் பொழுது, சச்சின் அவுட்டாகி விடுவாரோ என்று அச்சம் தோன்றுவதில்லையா? நினைத்ததெல்லாம் நடக்கும் பொழுது கடைசி நிமிடத்தில் எல்லாம் காணாமல் போய்விடுமோ என்ற பயம் நமக்கு உண்டாவதில்லையா? அது போல் பட்டருக்கும் கடைசி நிமிடத்தில் அபிராமி ஏதாவது சொல்லிவிடப் போகிறாளே என்ற பயம் வந்து விட்டதோ என்னவோ, 'தாயே, என்னைத் தள்ளி விடாதே' என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். அபிராமி தானே இங்கே அம்பயர்?

தரியலர் என்றால் பகைவர். இங்கே திரிபுர அசுரர்களைக் குறிக்கிறது. தமியன் என்றால் எளியவன், சிறியவன் என்று பொருள். 'தமியன் நான்' என்பது தமியேன் ஆனது. போது என்றால் மலர், தாமரை. அயன் என்றால் பிரம்மன். பிரம்மனின் ஐந்து தலைகள் நான்கானது புராணக்கதை. செற்ற என்றால் அழித்த, கொன்ற என்ற பொருள். தென்னிலங்கை செற்றான், அவனைச் செற்றான், இவனைச் செற்றான் என்று திருமாலின் அசுர வதங்களை அடிக்கடி திவ்வியப்பிரபந்தப் பாடல்களில் விவரிக்கக் காணலாம். இங்கே 'செற்ற கையான்' என்பது சிவபெருமானைக் குறிக்கிறது.

திரிபுர அசுரர்களையும் பிரம்மாவையும் ஒரே தட்டில் வைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சிவபுராணக் கதைகளில் இதற்கான விளக்கம் புதைந்திருக்கிறது; விவரமாக எழுதி உங்கள் நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. மேலோட்டமாகக் கோடிட்டு என் கருத்தை மட்டும் சொல்கிறேன்.

சிவனின் வதங்களிலேயே மிகவும் சிக்கலானது, சந்தேகத்துக்குரியது, திரிபுரவதம் தான். தேவ-அசுர அரசியல் காரணமாக நிகழ்ந்த போர் என்று தோன்றுகிறது. மூன்று அசுரர்களும் தேவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்த விவரங்கள் எதுவும் இல்லை. மாறாக, சிவனை பொழுது தவறாமல் வழிபட்டு வந்த விவரங்கள் இருக்கின்றன. சிவன் மேல் பக்தியோடும், தேவர்களோடு போர் புரியாமலும், தங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அழித்தார் சிவன். பிரம்மனோ கடவுள். சலனங்களுக்கப்பாற்பட்ட முதிர்ந்த மனத்தோடு இருக்க வேண்டிய தேவன். பார்வதியின் பணிவுக்கு ஆசைப்பட்டு மயங்கி சிவனாக, கண நேரமானாலும் வணக்கத்துக்கு முறையான உரிமையுடைய இன்னொருவராக, ஏமாற்றினார். பக்தி எனும் நன்னடத்தை கொண்டாலும் அசுரர்கள் எண்ணத்தால் தீயவர்கள்; தீய எண்ணம் கொண்டதால் தேவனான பிரம்மனும் அசுரனே என்ற கருத்தில் அசுரவதத்தையும் பிரம்ம சிரச்சேதத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தார் பட்டர். இது என் கருத்து.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)