2010/09/03

உடையாளை ஒல்கு...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 84 ராகம்: ஹடானா


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதி செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ் சடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கென்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.

(அபிராமி) சிவந்த பட்டு உடையணிந்தவள், ஒளி வீசும் பிறை நிலாவைத் தலையில் சூடியவள், நூல் போல் மெலிந்த இடை கொண்டவள், எங்கள் தலைவனாகிய சிவபெருமானின் பக்கமிருக்கும் சக்தியானவள், நம்பிக்கையற்ற தீயவரின் உள்ளத்தில் குடியேறாதவள்; எனக்குப் பிறவாமை அளித்த இவளை அடையாளம் கண்டு, உங்களுக்கும் இனிப் பிறவாமை கிடைக்கும்படி வழி செய்து கொள்ளுங்கள்.

அபிராமியைக் கண்ட ஆனந்தத்தில், அவளை நமக்கு அடையாளம் சொல்கிறார் பட்டர். தான் கண்ட காட்சி, தான் பெற்ற இன்பம் - நாமும் பெற விரும்புகிறார்.

அபிராமி அந்தாதி பாடல்களில் பட்டர் வரிக்கு வரி சிலேடை உபயோகித்திருப்பது இந்தப் பாடலில் தான் என்று நினைக்கிறேன். உடையாள் என்றால் கடவுள்; செம்பட்டு உடையாள் என்பது சிவந்த பட்டாடையை உடுத்தியவள் என்ற பொருளில் வருகிறது. ஒல்கும் என்றால் மேலணிம், சூடும் என்று பொருள். ஒளிர் மதி சடையாள் என்பது பிறை நிலாவைச் சூடியவள் என்ற பொருளில் வருகிறது; நெஞ்சடையாள் என்பது நெஞ்சு+அடையாள் எனப் பிரிந்து, நெஞ்சத்தில் சேராதவள் என்ற பொருளில் வருகிறது. நுண்ணூல் இடையாள் என்பது மிக மெல்லிய நூல் போன்ற இடை கொண்டவள் என்ற பொருளில் வருகிறது; பெம்மான் இடையாள் என்பதை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். இடை என்பதற்கு பக்கம், பாகம் என்ற பொருளில் சிவபெருமானின் பக்கமிருப்பவள், இடதுபாகத்தில் இருப்பவள் என்று பொருள். இடை என்பதற்கு வலிமை, சக்தி என்றும் பொருள். சிவபெருமானின் சக்தியானவள் என்ற பொருளில் வருகிறது.

பெம்மான் இடையாளை என்று பாடியிருப்பதால், அபிராமி சிவனுடன் சேர்ந்து அர்த்தநாரி வடிவத்தில் அவருக்குக் காட்சியளித்திருப்பதாகப் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உருகிப் பாடியிருக்கிறார் அம்மா. அடிக்கடி கேட்ட சுவையான பாடல்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)