2010/09/11

பதத்தே உருகிநின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 92 ராகம்: ஆரபி


பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர்போன வழியுஞ் செல்லேன்
முதல்தே வர்மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

மூத்த கடவுளர் மூவருடன் ஏனையவரும் போற்றும் மலர் பூப்பது போல் புன்னகையை உடையவளே (அபிராமி) உன் பல்வேறு பெயர்களை மனமுருகிச் சொல்லி வழிபட்டு உனக்குப் பணிவிடை செய்யும் என்னை அடிமை கொண்டாய்; இனி பிறிதொரு மதத்தையோ அவர்கள் கடைபிடிக்கும் வழிகளையோ நான் பின்பற்ற மாட்டேன்.

நிலவு தோன்றலுக்கு முன், நிலவு தோன்றலுக்குப் பின் என்று பட்டர் பாடல்களைப் பகுத்தால், நி.தோ முன் பாடிய பாடல்களின் கருத்துக்கள் சிலவற்றை நி.தோ பின்னும் பாடியிருக்கிறார். காரணம், தான் சொன்னது சொன்னபடி நடந்தது என்பதை வலியுறுத்த மட்டுமல்ல, மற்றவரும் அப்படி அபிராமியின் அருளை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கவும் பாடினார் என்று நினைக்கிறேன்.

அபிராமியின் பெயர்களைச் சொல்லி வழிபட்டதன் பலன் கிடைத்து விட்டதால் அதை வலியுறுத்திச் சொல்கிறார். இனியொரு மதம் வேண்டேன் என்று அவர் சொல்வதன் காரணம் தான் இன்னொரு மதத்தையோ முறையையோ நினைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, அபிராமியை வணங்குவதால் சொன்னபடி அருளும் பிறவாமையும் கிடைக்கும் என்பதை வலியுறுத்தவே முன்பே சொன்ன கருத்தை மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார்.

பதத்தே என்றால் அபிராமியின் பல பெயர்கள். முதல் தேவர் மூவர் இங்கே பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிக்கிறது.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)