2010/09/20

ஆத்தாளை எங்கள்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்பயன் | ராகம்:சுருட்டி


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புமங்கைச்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே.

மாதுளம்பூ போல் சிவந்த நிறமும், மூன்று கண்களும், கைகளில் ஐந்து வகை மலரம்புகளும் பாசக்கயிறும் அங்குசமும் கரும்பு வில்லும் கொண்டு உலகங்களை படைத்து, அழிவுகாலம் வரை உயிர்களையெல்லாம் காத்தருளும் நம்முடைய தாயான அபிராமியை வணங்குவோருக்குத் தீவினை எதுவும் இல்லை.

'கரும்புமங்கை சேர்த்தாளை' என்பதை 'கரும்பும் அங்கை சேர்த்தாளை' என்று பிரிக்க வேண்டும். 'கரும்பு வில்லைக் கைகளில் ஏந்தியவள்' என்று பொருள்.

'நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்' என்று பாடிய பட்டர், தொடர்ந்து 'என்ன பேறு பெற்றேன்!' என்றார். அபிராமியை அறியும் பேறு பெற்றவர்களுக்குத் தீவினை அகலும் என்பதை இங்கே நூல்பயனாகக் குறிப்பிடுகிறார். அந்தாதியின் நிறைவுப்பாடலில் 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்ற' அபிராமியின் தோற்றத்தை மீண்டும் எடுத்துச் சொல்லி, 'இவள் அபிராம வல்லி, இவளே அருட்கொடி, இவள் எங்கள் தாய், தாயை வணங்குவோருக்கு ஒரு தீங்கும் வராது' என்று வலியுறுத்துகிறார்.

தாயை வணங்குவோம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)