2010/09/19

குழையைத் தழுவிய...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:100 | ராகம்:மத்யமாவதி


குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சிலெப்போதும் உதிக்கின்றவே!

ஒளி வீசும் புன்னகையும் மானை விட அழகியக் கண்களும் கொண்ட, கொடி போன்ற அழகியே (அபிராமி)! தேனை விட இனிமையான, மணம் வீசும், மலர்களால் நெருக்கித் தொடுக்கப்பட்ட அம்புகளையும் கரும்பு வில்லையும் ஏந்தியக் கைகளைத் தாங்கி நிற்கும், மூங்கிலை விடத் திடமான உன் வளைந்த தோள்களில், நீ அணிந்திருக்கும் கொன்றை மலர்மாலை உன் காதுகளையும் மார்பையும் தொட்டுத் தழுவுகிறது; இந்தக் காட்சியே என் மனதுள் நிலையாகத் தோன்றுகிறது.

குழை என்றால் காது. கழை என்றால் மூங்கில். விழைய என்றால் நெருங்கிய, நெருக்கமான என்று பொருள். திறல் என்றால் போர் - இங்கே அம்பு எனும் போர்க்கருவியைக் குறிக்கிறது. வேரி என்றால் தேன். உழை என்றால் மான். தமிழ் மொழியின் சிறப்பு 'ழ'கரம் என்பார்கள். அருமையான தமிழந்தாதி தந்திருக்கும் பட்டர், நூலின் நிறைவுப்பாடலில் 'ழ'கர எதுகையைப் பயன்படுத்தியது தற்செயலோ திட்டமோ எப்படியாயினும் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது.

'உதிக்கின்ற செங்கதிர்' என்று தொடங்கிய நூலை 'எப்போதும் உதிக்கின்றவே' என்று முடித்து, முழுமையான அந்தாதிப் பாமாலையைத் தொடுத்து வழங்கியிருக்கிறார் பட்டர். அபிராமி தன் நெஞ்சில் என்றுமே நிலைத்திருக்கிறாள் என்கிறார்.

அபிராமியின் அழகுக் கோலத்துடன், பட்டருக்குப் பிறவாமை கிட்ட உதவி செய்த அருந்தமிழும் என்றும் நிலைத்திருக்கட்டும்.


பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல்பயன் | ஆத்தாளை எங்கள்...