2010/09/13

விரும்பித் தொழுமடியார்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 94 ராகம்: ஆரபி


விரும்பித் தொழுமடியார் விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன்சொன்ன எல்லாம்
தரும்பித் தராவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

அபிராமியை மனதில் வரித்து விரும்பி வணங்குவோர், கண்ணில் நீர்மல்கி, உளளம் முழுதும் பரவசமாகித் தோன்றிய மகிழ்ச்சிப் பெருக்கின் இனிமையில் தேனுண்ணும் வண்டைப் போல் தன்னை மறந்துக் களித்து, எண்ணமும் மொழியும் ஒன்றாய்ச் சேராத பித்தர் போல் நடந்து கொள்வார்கள்; எனினும் அவள் வழி நல்வழியே.

சுரும்பு என்றால் வண்டு. தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டால் எப்படி இருக்கும்? பட்டர் அபிராமியைக் கண்டது போலிருக்கும்.

எளிமையான பாடல். அபிராமி அடியவர்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், உன்மத்தர் போலவும், பித்தராகவும், பரவசப்பட்டும் இருப்பார்கள் என்று அடையாளம் காட்டுகிறார். அப்படித் தோன்றினாலும் அவ்வடியார்கள் பற்றியிருப்பது அபிராமியின் பாதங்களாகையினால், அவர்கள் அபிராமியின் வழியிலேயே போவார்கள் என்றும் சொல்கிறார்.

ஒரு எளிமையான, சிறப்பான உட்பொருளும் இருக்கிறது. 'ஐயா, நான் தவறாகத் திதி சொன்னதால் என்னைப் பித்தனென்று சொல்லிப் பிணமாக்கவும் முடிவு செய்தீர். என்னைப் பித்தனாக்கியது சாதாரண இவ்வுலகப் பற்றா? இல்லையே? பற்றற்றவள் பற்று. அதனால் என் வழி நல்வழி தான் என்பது நிரூபிக்கப்பட்டது பார்த்தீர்களா?' என்று பட்டர் தன்னை ஒறுத்தவர்களைக் கேட்பது போலிருக்கிறது. 'இனியாவது அபிராமி அடியார்களை அடையாளம் கண்டு அவர்கள் செல்லும் வழியில் சேருங்கள்' என்று அவர் சொல்வது உட்பொருள்.

இந்தப் பாடலைப் பாடும் பொழுது பட்டர் எத்தனை பரவசத்துடன் இருந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடியிருக்கிறார்.

என் அம்மா குரலில் இந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம் பரவசப்பட்டிருக்கிறேன்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)