2010/09/05

மால் அயன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 86 ராகம்: ரஞ்சனி


மாலையன் தேட மறை தேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலைவெங் காலனென்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே.

பாலும் தேனும் சர்க்கரைப்பாகும் கலந்தது போல் குளிர்ந்த இனியமொழி கொண்டவளே (அபிராமி), சினங்கொண்ட எமன் என் மேல் சூலத்தை எறியும் பொழுது திருமாலும் பிரம்மனும் வேதங்களும் தேவர்களும் தேடித் தொழும் உன் பாதங்களையும் வளையணிந்த கைகளையும் கொண்டு என்னை அண்டாமல் தடுத்து நிறுத்தினாய்.

அபிராமி நிலவைக் கொண்டு வந்த காரணத்தால், தான் எமன் வசம் சேராமல் பிழைத்தமைக்கு நன்றியுடன் பாடுகிறார் பட்டர். எமன் வசம் சேர்ந்தவர்கள் பாவ புண்ணிய விகிதப்படி நரகமோ சொர்க்கமோ அனுபவித்தாலும், மீண்டும் பிறவியை அடைவார்கள் என்ற புராணக் கருத்துக்களை முன்பே பார்த்தோம். இங்கே பட்டர் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் பாடவில்லை. எமனுலகம் சேராமல் அபிராமியுடன் சேரக் கிடைத்த வாய்ப்பை எண்ணி நன்றியுடன் பாடுவதாகக் கொள்ள வேண்டும். அபிராமியுடன் சேருவதால் பட்டருக்குப் பிறவாமை கிடைப்பதாகப் பொருள்.

வானவரும் தானவரும் அபிராமியின் காலடியே கதியாகக் கிடப்பதை முன்பே பல பாடல்களில் சொல்லியிருக்கிறார் பட்டர். சூடகம் என்றால் கையணி, கைவளை என்று பொருள். தேவர்கள் அடிபணிந்து வணங்கும் காலையும் வளையணிந்த கைகளையும் கொண்டு எமனைத் தடுத்து நிறுத்தியதாகச் சொல்வதேன்? மார்க்கண்டேயன் வரலாற்றை அறிந்தவர்கள் சிவன் எமனைக் காலால் உதைத்த கதையை அறிவார்கள். மார்க்கண்டேயனுக்கு அருள் கிடைத்த அதே ஊரில் அதே கோவிலில் தனக்கும் எமனிடமிருந்த கிடைத்த விடுதலையை அப்படிப் பாடுகிறார் பட்டர். மார்க்கண்டேயன் பொருட்டு சிவனால் எமனுக்கு கிடைத்த உதை, இப்பொழுது தன் பொருட்டு அபிராமியால் கிடைக்கட்டும் என்பது பட்டரின் அவா. எமனை எட்டி உதைப்பதே பெரும்பாலான முனிவர்களின் குறிக்கோளாக இருந்ததைப் பல சிவ-சக்தி நூல்களில் படிக்கலாம். இந்த முறை எமனைக் கால்பந்து ஆட அபிராமியை அழைத்திருக்கிறார் பட்டர். வளை அணிந்த கைகளில் அபிராமி பாசமும் அங்குசமும் ஏந்தியிருப்பதையும் முன்பே பாடியிருக்கிறார். எமன் வழக்கமாகப் பாசக் கயிறும் அங்குசமும் ஏந்தி வருவதாக நம்பிக்கை. இங்கே 'வளையணிந்த கையினால்' என்பதற்கு அபிராமி தன்னுடைய பாசக்கயிறையும் அங்குசத்தையும் எமனுக்கு எதிராகப் பயன்படுத்தியதாகப் பொருள். கதித்தல் என்றால் சினங்கொள்ளுதல், விரைவாகச் செல்லுதல் என்று பொருள். கப்பு என்றால் பிளவு பட்ட என்று பொருள். இங்கே சூலம் அல்லது அங்குசத்தைக் குறிக்கிறது.

இந்தப் பாடல் தொடங்கி ஐந்து பாடல்கள் ரஞ்சனி ராகத்தில் அமைந்திருக்கின்றன.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)