2010/06/30

வெளிநின்ற நின்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:19 | ராகம்:ஹம்சாநந்தி


வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

ஒன்பது வகை சக்திகளின் உருவாக விளங்குபவளே! என் கண் முன் தோன்றிய உன்னைப் பார்த்து என் விழியும் நெஞ்சும் கரை காணாத வெள்ளம் போல் மகிழ்ச்சியடைந்தாலும், இது பேரின்பத்தின் இடைநிலை என்கிற அறிவும் தெளிவும் எனக்கு ஏற்படுமாறு அருளியது உன் கருணையோ?

முந்தைய பாடலில் சிவ-சக்தி இணைந்த அர்த்தநாரி வடிவத்தில் தன் முன்னே வர வேண்டும் என்று வேண்டிய பட்டர், இந்தப் பாடலில் அப்படிப்பட்ட காட்சியின் விளைவைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் உட்கருத்து சிறப்பானது.

பட்டரின் நிலையைக் கற்பனை செய்து பார்ப்போம். சக்தியின் உருவத்தைக் கண்டதும் மகிழ்ச்சி தோன்றும். இயற்கை. பிறகு? அந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆவல், கவலை தோன்றலாம். அல்லது சக்தியின் உருவத்தைக் கண்டதனால் பெரும்பேறு எனும் பிறவாநிலைக்கான உத்தரவாதம் கிடைத்தது போன்ற நிம்மதி தோன்றலாம். அதைத்தான் அவர் களி என்றும் ஞானம் என்றும் சொன்னார். இரண்டையும் ஒருங்கே அளிக்க வல்லவள் அபிராமி என்றார். கண்களுக்கு எதிரே தெரிந்த காட்சி ஒன்று, அறிந்த காட்சி இன்னொன்று. பார்த்துக் களித்த காட்சி ஒன்று, புரிந்துச் சிலிர்த்த காட்சி மற்றொன்று. அகக்கண்ணையும் திறந்தது அபிராமியின் அருள் என்று வியந்து போனார். 'காட்சி வந்ததும் கண் திறந்ததா?' என்ற கேள்வியை அன்றைக்கே கேட்டிருக்கிறார் பட்டர்.

இந்த 'இருநிலை-எதிர்நிலை-சமநிலை' தத்துவத்தைக் கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் அது நம் வாழ்வின் ஒவ்வொரு இயக்கம், செயல், எண்ணத்தில் கலந்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். சுத்தம்-அசுத்தம், சித்து-அசித்து என்ற சாதாரண எதிர் நிலைகளிலிருந்து இன்பம்-பேரின்பம், ஜடம்-ஞானம் எனும் ஆழ்ந்த எதிர் நிலைகள் வரை சிவ-சக்தியின் வெவ்வேறு பொருளை உபமன்யு முனிவர் கண்ணனுக்கு விளக்கியதாக சிவபுராணம் கூறுகிறது. இங்கே அபிராமியைக் கண்டதும் ஏற்பட்டக் கரை காணாத மகிழ்ச்சி வெள்ளம், பிறவிக் கடலிலிருந்து வெளியேறிக் கரை காணவேண்டிய அவசியத்தையும் நினைவு படுத்துவதாகப் பட்டர் பாடியது ஆழமான கருத்து.

ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே வழங்கும் அபிராமியின் அருளைப் பற்றிய இந்தப் பாடலுக்குக் குமரன் எழுதியிருக்கும் விளக்கம் என்னைக் கவர்ந்தது (பின்னூட்டங்களும் சுவை).

சிவ-சக்தியின் இணைந்த வடிவத்தைக் கண்டதும் ஏற்படக் கூடியதான மகிழ்ச்சி நிலை, பட்டரின் ஆனந்த-பேரானந்தக் கருத்து, 'சமரச பரானந்த' என்று சௌந்தர்யலஹரியிலும் எழுதப்பட்டிருக்கிறது.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 20 | உறைகின்ற நின்...