2010/06/25

வந்திப்பவர் உன்னை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:14 | ராகம்:சாவேரி


வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க் கெளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே:

தேவர்களும், அசுரர்களும், தவமுனிகளும் உன்னை எப்பொழுதும் வணங்குகிறார்கள்; நான்கு திசைகளிலும் முகம் அமைந்த பிரம்மமனும், நாராயணனும், உன்னையே எக்கணமும் சிந்திக்கிறார்கள்; அழிவில்லாத பரமசிவனோ உன்னை உள்ளத்தியே கட்டி வைத்திருக்கிறார். இருப்பினும், இந்த உலகில் உன்னைத் தரிசனம் செய்து வழிபடுவோருக்கு உன் அருள் எளிதில் கிடைக்கிறதே!

'வானவர் தானவர் ஆனவர்கள் உன்னை வந்திப்பவர்; நாற்றிசை முகர், நாரணர் (உன்னை) சிந்திப்பவர்; அழியாப் பரமானந்தர் (உன்னை) பந்திப்பவர்; (எனினும்) எம்பிராட்டி நின் தண்ணளி பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம்' எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

தேவர்கள், ரிஷிகள், முப்பெரும் கடவுளர், யோகிகள் என்று வரிசையாகச் சொல்லி எல்லாரும் திரிபுரசுந்தரியை வணங்கும் போதிலும், அன்புடன் 'பவானி' என்று அவளை நினைத்த கணமே திரிபுரசுந்தரியின் அருள் பக்தர்களுக்குக் கிடைத்து விடுகிறது என்ற கருத்து சௌந்தர்யலஹரியிலும் லலிதா சஹஸ்ரநாமத்திலும் வருகிறது.

பிரம்மனைப் பொருத்த வரை, சக்தியை எக்கணமும் சிந்திக்கிறாரோ இல்லையோ எக்கணமும் மறக்காமலிருக்க வாய்ப்பிருக்கிறது; ஐந்து முகங்களில் ஒரு முகம் குறையக் காரணமாயிருந்தவள் என்கிறதே புராணம்?

இந்தப் பாடலின் எளிமையும், எதுகை மோனைகளும் சுவை.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 15 | தண்ணளிக்கு என்று...