2010/06/15

மனிதரும் தேவரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:4 | ராகம்:பூபாளம்


மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்தப்
புனிதரும் நீயுமென் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மனிதர்களும் தேவர்களும் மரணமில்லாத மார்க்கண்டேயரும் பணிந்து வணங்கும், மாணிக்கம் போன்ற சிவந்த பாதங்களை உடையவளே! கொன்றை மலர், குளிர்ச்சி தரும் நிலவு, பாம்பு, கங்கை நதி - இவற்றைத் தன் வார் போல் நீண்ட சடை மேல் தரித்திருக்கும் தூயவரான சிவனும், நீயும் என்றென்றும் என் சிந்தையில் தங்க வேண்டுகிறேன்.

புந்தி: மனம், சிந்தை

எளிமையான பாடல். பிரித்துப் போட வேண்டிய அவசியமே இல்லை. அபிராமியின் பாதங்களைத் தஞ்சமடைந்தவர், சிவபெருமானையும் துணைக்கு அழைப்பது ஏனென்று மட்டும் புரியவில்லை.

மாயா முனிவர் என்பதற்கு 'தவமுனிவர்கள்' என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'மாயா' என்ற சொல்லுக்குத் தமிழிலும் வடமொழியிலும் பொய்மை, உண்மையற்ற நிலை என்று பொருள் சொல்லியிருக்கிறது. தவம் என்ற பொருளைக் காணோம். 'மாயா முனிவர்' என்பதற்குத் 'தவமுனிவர்கள்' பொருந்தவில்லை. கடவூர்க் கோவிலில் இருப்பவர் மாளா முனிவர் - மார்க்கண்டேயர். அவரைத்தான் மாயா முனிவர் என்று பட்டர் பாடியிருக்கிறார். மாளா என்பது ஓசை நயம் கருதி மாயா என்றானதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. (இந்தக் கருத்தைச் சொன்னவர் திருமதி தேவகி முத்தையா - வழிமொழிகிறேன்).


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 5 | பொருந்திய முப்புரை...