2010/06/24

பூத்தவளே புவனம்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:13 | ராகம்:சாவேரி


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே?

பதினான்கு உலகங்களையும் தோன்றச் செய்தவளே! அவற்றைக் காத்து, பின் மறைப்பவளே! ஆலகால நஞ்சுண்ட சிவனுக்கும் முன்னால் தோன்றியவளே! என்றைக்கும் முதுமை பெறாத திருமாலுக்கு இளையவளே! பெருந்தவம் செய்தவளே! உன்னைத் தவிர்த்து வேறொரு தெய்வத்தை எதற்காக வணங்க வேண்டும்?

சௌந்தர்யலஹரியில் இந்தக் கருத்து வருகிறது. சக்தி கண்ணசைத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலையும் தொடங்குவார்களாம். சக்தி மறுபடி கண்ணசைத்தால் நிறுத்துவார்களாம். அதனால் சக்தியை விடச் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்ற கருத்தில் சௌந்தர்யலஹரிப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

அதை அப்படியே கையாண்டிருக்கலாம் பட்டர். கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்று படுகிறது. சக்தி தான் மூவரையும் படைத்தாள் என்றால், சிவனுக்கு முன்னால் தோன்றியவள் திருமாலுக்கு எப்படி இளையவளாக முடியும்? மீனாட்சி என்ற அவதாரத்தில் திருமாலின் தங்கையாக சக்தி தோன்றினாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதைத்தான் பட்டர் இங்கே சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தாலும், இது வரை பாடல் வரிகளில் முரண்பாடு இல்லாமல் கொண்டு போனவர் இங்கே அதை மறந்திருக்கிறார். சிவனுக்கும் முன்னால் தோன்றியவள் என்பதைத் தொடர்ந்து, அதற்குப் பொருந்துகிறார் போல் வேறு ஏதாவது சொல்லியிருக்கலாம். திருமால் தங்கை விவகாரத்தை வேறொரு பாடலில் எடுத்துக் காட்டியிருக்கலாம். ஒரே பாடலில் இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் வருவதால் சற்று சுவை குன்றுகிறது. பட்டருக்கு எண்ணக் களைப்போ? அல்லது என்ன 'தலை போகிற' அவசரமோ தெரியவில்லை.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 14 | வந்திப்பவர் உன்னை...