2010/06/21

நின்றும் இருந்தும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:10 | ராகம்:பிலஹரி


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தியானந்தமே.

அறிந்து கொள்ள முடியாத வேதசாரத்தில் கலந்தவளே, அருள் வடிவமே, ஹிமவானுக்குப் பிறந்தவளே, உமா, அழியாத பேரின்பமான முக்தியின் வடிவமே! நான் எந்த நிலையிலும் உன்னையே உணர்கிறேன்; உன் மலர் போன்ற பாதங்களையே வணங்குகிறேன்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்ற வரிக்கு, அறிஞர்கள் பல விதமாகப் பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'நின்றுகொண்டு இருந்தாலும், நடந்துகொண்டு இருந்தாலும்' என்ற வெளிப்படையான பொருள் சொன்னவர்கள் பெரும்பாலோர். இதில் நுட்பம் இருப்பதாக எண்ணி சற்றே ஆழமான பொருள் சொன்னவர்கள் சிலர். இரண்டுமே ஏற்கத்தகுந்தவை. பாராயணம் செய்ய நேர்பொருள் போதும்; பலவாறாய் ரசிக்க புதைபொருள் வேண்டும். இது என் கருத்து.

பட்டர் பாடல்களில் எளிமை முகத்திலடிப்பது உண்மைதான். எனினும் ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு சிறிய கிளைக்கருத்தைச் சொல்லியிருக்கிறார். இங்கே நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்பது, முறையே "அசைவன அசையாவிட்டாலும், உறையாதன உறைந்து போனாலும், இறவாதன இறந்து விட்டாலும், நிகழாதன நிகழ்ந்து விட்டாலும் (என்று நான் உணர்ந்தாலும்)" என்று குறிப்பதாக நினைக்கிறேன். பட்டரின் அந்த நாள் நிலையை மனதில் வைத்துப் பார்க்கும் பொழுது அவர் குறிப்பிடுவது இப்படி இருக்குமோ என்று எண்ணுகிறேன். மலரைப் பார்த்தால் நீ; மலையை பார்த்தால் நீ; நீரைப் பார்த்தால் நீ; நெருப்பைப் பார்த்தால் நீ; உயிரைப் பார்த்தால் நீ; உடலைப் பார்த்தால் நீ; அமைதியைப் பார்த்தால் நீ; எழுச்சியைப் பார்த்தால் நீ. இந்தப் பொருளில் தான் 'அமாவாசையைப் பார்த்தால் நீ; பௌர்ணமியைப் பார்த்தால் நீ' என, நடவாதது நடந்தாலும் என்கிறார் என எண்ணுகிறேன். அபிராமியின் நினைவாகவே இருந்ததால் தான் அரசன் திதி கேட்ட பொழுது, மனக்கண்ணில் 'நின்றி'ருந்த அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், 'பௌர்ணமி' என்றார். இந்தப் பாடலில் தன்னுடைய இயலாமையை - அபிராமியையே எந்த நிலையிலும் நினைத்திருந்ததால் ஏற்பட்ட பகுத்தறியும் இயலாமையை - வெளிப்படுத்துகிறார்.

அடுத்த வரியில் வரும் 'உமையே' என்ற சொல்லிலும் ஒரு கிளைக்கருத்து இருக்கிறது. உமா என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருள். உமா என்பதற்கு, 'பெண்ணே வேண்டாம்' என்றும் பொருள் உண்டு. 'விட்டால் போதும்' என்ற பொருளில் அது தோன்றினாலும், இதன் பின்னணியில் சுவையான புராணக்கதை இருக்கிறது. பார்வதியாகப் பிறந்த சக்தி, கரிய நிறத்தவளாக இருந்தாளாம். சிவன் பார்வதியை 'கரிக்குஞ்சு' என்று கிண்டல் செய்ய, பார்வதி கோபம் கொண்டு சிவனை விலகினாளாம். பதிலுக்கு ஏதாவது சிவனைக் கிண்டல் செய்து விட்டுப் போகக்கூடாதோ? தன்னுடைய நிறத்தை மாற்றக் கடுந்தவம் செய்யப் போனாளாம். 'வேண்டாம், கடுமையான தவம் மேற்கொள்ளாதே' என்று பார்வதியை அவளுடைய தாய் தடுத்ததாகப் புராணக் கதை. (உ, மா: பெண்ணே, வேண்டாம்!). இந்தப் பாடலுக்குத் திரும்புவோம். திதியைத் தவறாகச் சொல்லிவிட்டு, உயிர் பிழைக்க பட்டர் அந்தாதி பாடியது அமாவாசையன்று. அமாவாசை பௌர்ணமியாக என்ன தேவை? ஒளி.

இந்தப் பாடலுக்கான கருவை சௌந்தர்யலஹரியிலிருந்து இறக்குமதி செய்தது போல் ஒற்றுமை. 'மனஸ் த்வம் வ்யோம த்வம்' என்ற சௌந்தர்யலஹரி செய்யுள் வரிகளில் திருபுரசுந்தரியை 'எல்லாம் நீ' என்ற பொருளில் வழிபடுவதாக வருகிறது.

சிவன் கொடுத்த சௌந்தர்யலஹரியை நந்தியிடம் அசடு போல் பறிகொடுத்த ஆதிசங்கரர், மீண்டும் சிவனிடமே சென்று கோள் சொல்லி முறையிட்டதாக வரும் பின்னணிக் கதையைத் தெரிந்தவர்கள், இந்தப் பாடல் சிவனே எழுதியது என்று சொல்வார்கள். அது உண்மையாகும் வகையில், சிவனின் நினைவில் சக்தி எல்லா வடிவாகவும் அல்லது வடிவே இல்லாமலும் நிறைந்திருப்பதாக அறிய முடிகிறது. அதைத்தான் பட்டர் 'நின்றும் இருந்தும்' என்று நிலை, நிலையின்மை, நிலை கடந்த நிலை என அனைத்து நிலைகளிலும் அபிராமியையே நினைப்பதாகப் பாடியிருக்கிறார் என்று தோன்றுகிறது. நின்று கொண்டும், இருந்து கொண்டும், கிடந்து கொண்டும் நினைக்கிறேன் என்று சாதாரண மனித இயக்க நிலைகளில் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஆழம் என்பதே தோண்டத் தோண்டத் தானே தெரிகிறது? பத்து விரலில் ஆழம்; பத்தடியிலும்.

பட்டரின் இந்தப் பாடல், 'நெக்கு நெக்குள்ளுருகி புக்கு நிற்பதென் கொல்லோ' என்ற உருக வைக்கும் திருவாசகப் பாடலை நினைவூட்டுகிறது. 'நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி' என்று திருவாசகத்திலும் பாடப்பட்டிருக்கிறது. எந்த நிலையிலும் இறைவனை வணங்குவதாகக் கருத்து.

வீரைக் கவிராஜ பண்டிதர் என்று ஒரு புலவரும் அபிராமியைப் பற்றிப் பாடியிருக்கிறார் - அரிய சௌந்தர்யலஹரியை அருமையான தமிழில் வழங்கி. இவருக்குப் பின்னணிக் கதை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் இன்றைக்கு இவர் பாடல்கள் அபிராமி அந்தாதி அளவுக்கு பிரபலமாகியிருக்கும். வடமொழி வடிவை கரடு முரடாய், பொருள் புரியாமல், அப்படியே உருப்போட்டு சொல்பவர்கள், ஒரு வேளை கவிராஜரின் வளமிகு தமிழாக்கத்தையும் போற்றிச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்.

கவிராஜரின் பாடல், மாதிரிக்கு:
      மனமும்நீ வெளியும்நீ வளியும்நீ கனலும்நீ
          மறிபுனலும்நீ புவியும்நீ
      நினையில் நிணபரமற வளர்ந்தொளி பரந்துவிடில்
          நீயன்றி ஒன்றுமுளதோ
      உனதுமா ஞானானந்த உருவைப் புவன
          உருவென வகுத்தருளவோ
      அனையுமாய் மகவுமா மாமாறுபோல் நீசத்தி
          அருணவடி வாயதுமையே.


கவிராஜர் அபிராமியை 'ஞானானந்த உரு' என்கிறார். பட்டர் அபிராமியை 'முக்தி ஆனந்தமே' என்கிறார். முக்தி (பிறவா நிலை) மட்டுமே என்றைக்கும் நிறைவான, அழியாத ஆனந்தம் என்ற கருத்து சௌந்தர்யலஹரி, லலிதா சகஸ்ரநாமத்திலும் வருகிறது; சக்தி, 'முக்தி ரூபிணி' என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறாள்.

அம்மாவின் குரலும் அழியாத ஆனந்தம் தான்.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 11 | ஆனந்தமாய் என்...