2010/06/23

கண்ணியது உன்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:12 | ராகம்:சாவேரி


கண்ணிய துன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
பண்ணிய துன்னிரு பாதாம் புயத்தில் பகலிரவாய்
நண்ணிய துன்னை நயந்தோர வையத்து நான்முன்செய்த
புண்ணிய மேதென்னம்மே புவியேழையும் பூத்தவளே.

ஏழுலகையும் படைத்த என் தாயே! நான் எக்கணமும் நினைத்திருப்பது, உன் சிறப்பை; உன்னடியார் கூட்டத்துடன் விரும்பிச் சேர்ந்து இரவு பகலென நான் எந்நேரமும் அன்புருக வழிபடுவது, உன் தாமரைப் பாதங்களை; இதற்கு நான் முற்பிறவிகளில் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

எளிமையான பாடல். ஈற்றடியில் உட்கருத்து. 'ஏழு உலகினையும் படைத்தவள்' என்று போற்றினார். அப்படிப்பட்டவளின் புகழைப் பாடுவது 'தான் செய்த புண்ணியம்', என்று தன்னடக்கத்துடன் முடிக்கிறார். இதில் என்ன உட்கருத்து?

இந்து சமயத்தில் ஓருலகு, ஈருலகு, மூவுலகு, ஏழுலகு, ஈரேழுலகு, அண்டம், பேரண்டம் என்று அடுக்கிக் கொண்டே போவதைக் காணலாம். பட்டர் கூட ஒரு பாடலில் ஏழுலகு என்றும், இன்னொரு பாடலில் பதினான்கு உலகு என்றும் சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் ஏழுலகுக்கு என்ன பொருள்? அதைப் புரிந்து கொள்ள மொத்த உலகையும் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும. குறைந்தது, தெரிந்து கொள்ளவாவது வேண்டும். ஓருலகு, அண்டம் என்ற எல்லாம் அடங்கிய கணக்கில் சொல்லப்படுகிறது. ஈருலகு என்றால் மேலடுக்கு, கீழடுக்கு எனப் பகுப்பபட்ட இரண்டு தட்டு உலகங்கள் என்று பொருள். மேலுலகம், பூவுலகம், பாதாளம் என மூன்று உலகப் பிரிவைக் குறிப்பது மூவுலகு. (ஏன் பூமியைத் தனியாகப் பிரித்தார்கள் என்று தெரியவில்லை). இரண்டு தட்டு உலகங்கள் என்றோம் இல்லையா? அந்த ஈருலகில், மேலுலகங்கள் ஏழு, கீழுலகங்கள் ஏழு. மொத்தம் ஈரேழு. மேலுலகங்கள் ஏழில் நாமிருக்கும் பூமி, மேலிருந்து கீழாக, ஏழாவது என்று நம்பப்படுகிறது. சரி, புண்ணியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? அழிவென்பது உடலுக்கு மட்டுமே, உயிரெனப்படும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்பது, இந்து மத ஆதார நம்பிக்கைகளுள் ஒன்று. பிறவிக்குப் பின் பிறவியெடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்த நற்பயனின் விளைவாக அடுத்தடுத்த பிறவிகளில் மேம்பட்டு, இறுதியில் பிறவியில்லா நிலையடைவது இந்துமத குறிக்கோள்களில் முக்கியமானது. உயிர் அல்லது ஆத்மா, ஒவ்வொரு உலகமாகப் பிறவிப் பயணம் செய்கிறது. பூமிக்கு வரும்பொழுது ஓரளவுக்குப் புண்ணியம் சேர்த்து விடுகிறது. இங்கிருந்து அடுத்த மேல்தட்டு உலகங்களைப் பார்த்தால் (புவ, சுவ, மக, ஜன, தப, பிரம்ம) ஒவ்வொன்றும் இன்னும் மேன்மைக்கான இடங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மேலுலகங்களைக் கடந்து பிறவியில்லா நிலையடைய இந்தப் பிறவியில் (பூமியில்) நல்முறையில் வாழ வேண்டும். இறைவனை/இறைவியை வழிபடுவது தான் அந்த நல்முறை. கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும், விளக்கம் இது தான்: எத்தனையோ புண்ணியம் செய்து அரிதாகக் கிடைத்த மானிடப் பிறவியில் இறைவனை வழிபட்டு பிறவா நிலையடைய முயற்சி செய்ய வேண்டும். மானிடப் பிறவியில் மட்டும் தான் பிறவா நிலை பற்றிய அறிவே தோன்றுமாம். மற்றக் கீழுலகப் பிறவிகளில் தோன்றாதாம். மற்றக் கீழுலகப் பிறவிப்பயணங்களில் புண்ணியம் செய்கிறோம், பாவம் செய்கிறோம் என்ற நினைவு கூட இருக்காதாம். புண்ணியம் செய்திருந்தால் அறியாமல் செய்தது தான். (புராணக்கதைகளைப் படித்தால் அப்படித் தோன்றவில்லை. அறியாமல் செய்தால் புண்ணியம் என்பதை ஏற்கும் பொழுது பாவமும் அறியாமல் செய்வது தானே என்று தோன்றுகிறது. அறியாமல் செய்த பாவத்தின் சம்பளம், மனிதரல்லாத மற்றப் பிறவியா என்று கேட்கத் தோன்றுகிறது).

கதையை விட்டு கவிதைக்கே வருகிறேன். பட்டர், தன் முற்பிறவிகளில் தான் அறியாமல் செய்த புண்ணியம் என்ன என்று அபிராமியிடம் வியந்து கேட்கிறார். ஏழுலகையும் புண்ணியப் பேற்றையும் இணைத்தது தான் உட்கருத்து.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 13 | பூத்தவளே புவனம்