2010/06/14

அறிந்தேன் எவரும்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:3 | ராகம்:பூபாளம்


அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின்னன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே.

பெருஞ்செல்வமே, அபிராமி! உன் அடியார்களின் சிறப்பை உணராமல் பிறவியாகிய நரகத்துள் மீண்டும் விழும் மனிதரை அஞ்சிப் பிரிந்து, எவரும் அறியாத அடைக்கலமான உன் திருவடிகளை அறிந்து கொண்டு சிறப்படைந்தேன்.

திருவே, நின்னன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் நரகுக்கு மறிந்தே விழும் உறவாய மனிதரை வெருவி நினது திருவடிக்கே பிறிந்தேன்; எவரும் அறியா மறையை அறிந்தேன்; அறிந்து கொண்டு செறிந்தேன் என்று பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

"உன்னையும் உன் அடியார்களின் பெருமையையும் இதுவரை நான் மனதாலும் எண்ணாத காரணத்தால் மீண்டும் நரகத்தில் விழுந்து மனிதர்களையே நம்பிக் கொண்டிருந்தேன்; அவர்களைப் பிரிந்து, எவரும் அறியாத வேதசாரமான உன்னை அறிந்து கொண்டு உன் திருவடிகளைத் தஞ்சமடைந்தேன்" என்று அறிஞர்கள் பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

பட்டர் ஒரு மெய்யான அபிராமி அடியார் என்பது தெளிவாகப் புரிகிறது. இல்லையென்றால் முகமூடி அணிந்து ஊரை விட்டு ஓடாமல் பாட்டு பாடி நிலவை வரவழைக்க முயற்சிப்பாரா? அபிராமி அடியார்கள், மற்ற அடியார்களின் பெருமையை அறியாதிருப்பரா என்பது சந்தேகமே. அதனால் அடியார்களின் பெருமையை மனதால் நினைக்கவில்லை என்ற கருத்தில் பட்டர் பாடவில்லை என்று கருதுகிறேன். இந்தப் பாடலின் கட்டத்தில் அபிராமியின் அன்பர் யார்? பட்டர். விவரம் தெரியாமல் உளறினாலும் பட்டர் அபிராமியின் அன்பர் என்பது உண்மை. 'அபிராமி அன்பரின் பெருமை எண்ணாத நரகுக்கு உறவாய மனிதர்' என்று இங்கே அரசனை மறைமுகமாகத் தாக்குகிறார் என்றே நினைக்கிறேன். 'அரசனை நம்பி ஒரு பயனுமில்லையம்மா, அபிராமி, உன்னை அறிந்தேன், என்னைக் காப்பாற்று' என்று பொருள்படச் சொல்லியிருப்பார் என்றே தோன்றுகிறது. அரசன் என்கிற மனிதரை நம்பினால் நரகம் (தலையை வெட்டுவதாக அல்லவா சொல்லிவிட்டுப் போனார் சரபோஜி?); அபிராமி என்கிற கடவுளை நம்பினால் உயிர் பிழைக்கக் கூடும், அல்லது மோட்சமாவது கிட்டும் என்ற நம்பிக்கையில் அபிராமியைச் சரணடைந்து பாடியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

'எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு' என்பதற்குப் பொருள் சொன்ன அறிஞர்கள், 'எவருக்கும் புரியாத வேதத்தின் பொருளை அறிந்து கொண்டு' என்றோ, 'எவரும் அறியாத வேதமான உன்னை அறிந்து கொண்டு' என்றோ, பொருள் சொல்லியிருக்கிறார்கள். 'எவருக்கும் புரியாதது, இவருக்கும் மட்டும் எப்படிப் புரிந்தது?' என்று கேட்கத் தோன்றுகிறது. அன்றைய நிலையைப் பார்ப்போம். பட்டரின் தலைக்குக் கெடு. அரசனை நம்பிப் பயனில்லை. யாரை நம்புவது? முன்பே சொன்னபடி, அபிராமியைத்தான் நம்ப வேண்டும். 'மறை' என்ற சொல்லுக்கு 'அடைக்கலம்' என்று ஒரு பொருள் உண்டு. இங்கே 'அடைக்கலம்' என்ற பொருளில் 'அபிராமியின் திருவடிகள் எவருக்கும் கிடைக்காத அடைக்கலம்' எனப் பாடியிருக்கிறார் என்று நம்புகிறேன்.

என் தமிழறிவு, மிகக்குறைவில் பாதி. பட்டரின் பாட்டில் பிழை சொல்லவில்லை, இருந்தாலும், 'பிறிந்தே, மறிந்தே' போன்ற சொற்கள் எதுகைக்காகச் சேர்க்கப்பட்டவை என்றே தோன்றுகிறது. நிறையத் தமிழகராதிகளில் தேடிவிட்டேன். சொற்களைக் காணோம். பிறிது என்ற தமிழ்ச்சொல் வேறுபட்ட, மாறுபட்ட என்ற பொருளில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் பிறிந்தேன் என்பதை மருவாக ஏற்றுக்கொள்ளலாம். மறிந்தே என்பது மறுபடி என்பதன் திரிபாக ஏற்றுக்கொள்ளலாம். அறிஞர்கள் கூட 'பிரிந்தேன்' என்று எளிய வழியைக் கையாண்டிருக்கையில், அப்பாதுரைக்கேன் வம்பு? பிறிந்தே, மறிந்தே சொற்களை மற்றத் தமிழ்ப் பாடல்களிலோ, அகராதியிலோ சந்தித்தால் சொல்லுங்கள். நன்றி.


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 4| மனிதரும் தேவரும்...