2010/06/20

கருத்தன எந்தை...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

நூல்:9 | ராகம்:பிலஹரி


கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையுமம்பும்
முருத்தன மூரலும் நீயுமம்மே வந்தென் முன்நிற்கவே.

என் தந்தையாகிய சிவபெருமானின் கண்ணையும் கருத்தையும் கவரும் பொன்மலை போன்ற பெருத்த முலையினால் அழுத பிள்ளைக்கு பாலும் பேரருளும் வழங்கினாய்; அத்தகைய சிறப்புமிக்க மார்பை அலங்கரிக்கும் மாலையுடனும், கரும்பு வில்லும் அம்பும் ஏந்திய சிவந்த கைகளுடனும், முருக்கம்பூ போன்ற நெருங்கிய சிவந்த உதடுகளில் புன்னகையுடனும் என் முன் தோன்ற வேண்டும், என் தாயே!

பிரித்துப் பொருள் சொல்ல வேண்டிய அவசியமில்லாத பாடல். அழுத பிள்ளைக்குப் பால் வழங்குவது உயிர் கொடுப்பது போல. இங்கே பட்டர் வேண்டுவதும் உயிர்ப்பிச்சை (அரசனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே?); பசிக்கு அழும் பிள்ளை போல் அபிராமியின் அருளுக்கு அழுவதாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு, "அன்று ஒரு பிள்ளைக்குப் பால் கொடுத்து அருளினாய் அல்லவா, இன்று இங்கே இன்னொரு பிள்ளை உன் அருளுக்காக அழுகிறேன் - தாயே, என் முன்னே வந்து எனக்கும் அருள் தருவாய்" என்று கெஞ்சுகிறார்.

மூரல் என்றால் புன்னகை. குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் புரியும் புன்னகை. முருத்தன என்பதற்கு மென்மையான என்று ஒரு பொருள் உண்டு. (மயிலிறகு போன்ற)'மென்மையான உதடுகளில் புன்னகையுடன்' என்று அறிஞர்கள் சிலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். இங்கே சிவப்பு நிறம் மறுபடியும் தலைதூக்கி நிற்பதால், முருத்தன என்பதும் அந்த வகையில் சிவப்பு நிறத்தைக் குறிப்பதென்று எண்ணுகிறேன். முருக்கம்பூ போன்ற நெருங்கிய, சிவந்த (முருத்தன்ன) உதடுகளில் புன்னகை என்பது, மயிலிறகு போன்ற மென்மையான என்பதை விடப் பொருத்தமாக அமைகிறது என்று நினைக்கிறேன். பெண்ணின் உதடுகளை மயிலிறகுக்கு ஒப்பிடுவது சரியாகத் தோன்றவில்லை. பெருத்த முலைக்கு முருத்த நகை பொருத்தம்."
இங்கே 'பாலழும் பிள்ளைக்கு' என்பதன் பின்னணிக் கதை பலருக்கும் தெரிந்திருக்கலாம். குழந்தை ஞானசம்பந்தருக்கு முலைப்பால் வழங்கித் தாயானவள் என்று சக்தியைப் பற்றி ஒரு கதை உண்டு. இந்தக் கதை சௌந்தர்யலஹரியில் வருவதைப் படித்து வியந்தேன். ஆதிசங்கரருக்கு தமிழ் நாயனாரைப் பற்றி எப்படித் தெரிந்தது? 'சாரஸ்வதமிவ தயவத்ய தத்தம் த்ராவிட சிசு ராஸ்வத்ய' என்ற வரியில் திராவிட சிசு என்று சங்கரர் சொல்லியிருப்பது ஞானசம்பந்தரைப் பற்றி என்று நானும் நம்புகிறேன். இங்கே முலைப்பாலை சரஸ்வதியென்று வர்ணித்திருக்கிறார் சங்கரர். சரஸ்வதி கலைவாணியல்லவா? சக்தியின் முலைப்பாலாக ஞானசம்பந்தரின் அறிவில் கலந்தவள் கலைவாணி என்ற சங்கரரின் கற்பனையை ரசிக்க முடிகிறது. (சங்கரர் ஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்று அழைப்பது வியப்பாக இல்லை? பண்டைய இறையிலக்கியங்களில் தமிழ்ப்புலவர்கள் வடமொழிப் புலவர்கள் பலரை ஆரிய முனிவன் என்று சொல்லிப் படித்திருக்கிறேன்; ஒரு ஆரியப் புலவன் தமிழனைத் திராவிட சிசு என்று அழைத்து இப்போது தான் படிக்கிறேன். ஆரிய-திராவிட பிரிவினை எங்கே போகிறது பாருங்கள்.)


தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)



>>> நூல் 10 | நின்றும் இருந்தும்...