2010/09/01

அளியார் கமலத்தில்...

நூறு நாளில் அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி:நூல் 82 ராகம்: ஹடானா


அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடினெங்ஙனே மறப்பேனின் விரகினையே?

தாமரை மலர் போன்ற குளிர்ச்சியான தெய்வப்பெண்ணே! இவ்வுலகும் அண்டங்களும் எல்லாமே உன்னுடைய அழகின் ஒளியாக விளங்குவதை எண்ணும் பொழுது வானையும் தாண்டிக் கரைமீறும் அளவுக்கு என் உடலும் மனமும் களிப்புற வைக்கும் உன் திறனை எப்படி மறக்க முடியும்?

நிலவையும் அபிராமியையும் கண்ட மகிழ்ச்சியில் தொடர்ந்து பாடுகிறார் பட்டர். அண்டம் முழுதும் நிறைந்திருப்பது அபிராமியின் ஒளி என்பதை உணர வைத்து மகிழச் செய்வதும் அபிராமி தான் என்பது பாடலின் சாரம்.

அளியார் என்பதை அளி+ஆர் என்று பிரிக்க வேண்டும். 'அளி ஆர் கமலத்தில்' என்பதற்கு குளிர்ந்த தாமரை போன்றவளே என்று பொருள் சொல்லியிருக்கிறேன். பட்டர் பாடுவது அபிராமியின் அருளைப் பற்றி. குளிர்ச்சி அருளுக்கு ஆகி வருவதால் அப்படிப் பொருள் சொல்லியிருக்கிறேன். அளி என்பதற்கு வண்டு என்றும் பொருள். அந்த வகையில் 'வண்டுகள் மொய்க்கும் தாமரை' என்றும் பொருள் சொல்லலாம். வண்டுகள் மொய்க்கும் தாமரை மேல் அமர்ந்தவளே/தாமரையைப் போன்றவளே உன் அருளை எண்ணிக் களித்தேன் என்றும் பொருள் கொள்ளலாம். (வண்டு மொய்க்கும் தாமரை போல் அடியார்கள் மொய்க்கும் அபிராமி என்று பொருள்). கரணம் என்பதற்கு உடல், மனம், தந்திரம் என்று பல பொருளுண்டு. விரகு என்றால் திறமை என்று பொருள்.

'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...கோனாகி யானெனதென்றவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே' எனும் திருச்சதகப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கும் ஏறக்குறைய இதே கருத்து நினைவுக்கு வருகிறது.

எளிமையான பாடல், இனிமையான ராகம்.

பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)