skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/08/09
தஞ்சம் பிறிதில்லை...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி:நூல் 59 ராகம்: காபி
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின் றிலேனொற்றை நீள்சிலையும்
அஞ்சம் புமிக்கலராகி நின்றா யறியா ரெனினும்
பஞ்சஞ் சுமெல்லடி யாரடியார் பெற்ற பாலரையே.
பிழை செய்த தன் பிள்ளைகளின் அறியாமையைத் தண்டிக்காமல் பொறுத்தருளும் மென்மையான பாதங்களைக் கொண்ட (அன்னைகளைப் போல்), நீண்ட கரும்பு வில்லும் ஐவகை மலர்களால் தொடுத்த அம்பும் ஏந்தி நிற்கும் உன்னை மனதில் நிறுத்தி, (உன்னை விடச்) சிறந்த அடைக்கலம் வேறெதுவுமில்லை என்று வழிபட எனக்குத் தோன்றாதிருக்கலாம்; (அப்படி நடந்திருந்தால் உன் பிள்ளையான நான் செய்தத் தவறையும் பொறுத்தருள வேண்டும்).
எளிய பாடல். தவநெறி என்பது வழிபாட்டு முறை என்ற பொருளில் வருகிறது. 'அபிராமியை விடச் சிறந்த அடைக்கலமில்லை' என்ற மாறாத நம்பிக்கையுடன் வழிபட வேண்டும் என்று பட்டர் சொல்கிறார். பிழைப்புக்காக அரசனை நம்பி மோசம் போனதைக் குறிப்பாகச் சொல்கிறார் - பிறவி எடுத்தக் காரணத்தினால் இன்னொருவரிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதை முன்பாடல்களில் 'இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று' எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிலை என்றால் வில். ஒற்றை நீள் சிலை இங்கே நீண்ட கரும்பு வில்லைக் குறிக்கிறது. 'அஞ்சம்பு மிக்கலர்' என்பதை அஞ்சு அம்பு இக்கு அலர் எனப் பிரிக்கலாம். இக்கு என்றால் இறுக்கிய, நெருக்கமாகக் கட்டிய என்று பொருள். அலர் என்றால் மாலை என்று பொருள். ஐவகை மலர்களால் தொடுக்கப்பட்ட அம்பு என்று பொருள் கொள்ளலாம். பஞ்சஞ்சு மெல்லடி என்பதை பஞ்சும் அஞ்சும் மெல்லடி என்று பிரிக்க வேண்டும். அருமையான உவமை. பஞ்சை விட மென்மையான பாதங்களைக் கொண்ட பெண்கள் என்ற பொருளில் வருகிறது (அன்னைகளுக்கு உவமை). பஞ்சை விட மென்மையான பாதங்களைக் கொண்ட பிள்ளைகள் என்றும் பொருள் கொள்ளலாம் (அடியார்களுக்கு உவமை). 'அடியாரை அடியார்' என்ற சிறு சிலேடைச் சொல்லாடலை ரசிக்க முடிகிறது.
அபிராமியை இங்கே அங்குசம் பாசக்கயிறு கொண்டவளாகச் சொல்லாததற்கு ஏதேனும் காரணம் உண்டா? தவறு செய்தவர்களைப் பாசக்கயிற்றால் இழுத்து அங்குசம் கொண்டு தைத்துத் தண்டிக்கலாமே? அம்பு, வில், அங்குசம், கயிறு, கபாலம் என்று அத்தனையும் கைகளில் ஏந்தியவள் என்று முன்பு சொல்லிவிட்டு, இங்கே மலரம்பும் கரும்புவில்லையும் கொண்டவளாகச் சித்தரித்திருக்கிறாரே? தவறு செய்த பிள்ளைகளைத் தாய் எப்படிக் கண்டிப்பாள் என்பதை நினைத்துப் பார்த்தால் இந்த உவமையின் நுண்சுவை புரியும். அபிராமியை வணங்க மறந்த அடியவரை அறியாச் சிறுபிள்ளைகளாகவும், இனிய சொல்லும் நோகாத தண்டனையும் வழங்கித் தவறு செய்தோரை திசை திருப்பும் அபிராமியைத் தாயாகவும், பட்டர் நம்பியதால் இங்கே கரும்பு வில் மலரம்பு தரித்தவளாகக் காட்டுகிறார். 'நீயே தான் எனக்கு வழிகாட்டி, என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் விழிகாட்டி' என்று பட்டர் தொடர்ந்து பாடுகிறார். விழி காட்டு, வழி காட்டு, பழி காட்டாதே என்று குறிப்பால் சொல்கிறார்.
இந்த உவமைகள் சௌந்தர்யலஹரியிலும் கையாளப்பட்டுள்ளன. 'அம்புவில் ஏடார் போது ஏக நெடுங்கழை' என்று வீரையார் தமிழாக்கம் தந்திருக்கிறார். கழை என்றால் கரும்பு; 'ஏக' என்பது ஒன்று, ஒற்றை என்ற பொருளில் வருகிறது. ஏக நெடுங்கழை = ஒற்றை நீள்சிலை. போது என்றால் மலர்; ஏடார் என்பது மலரிதழ்கள் என்ற பொருளில் வருகிறது. ஏடார் போது அம்பு = இக்க அலர் அம்பு.
பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
►
ஜூலை
(31)
▼
ஆகஸ்ட்
(31)
அரணம் பொருள்...
வையம் துரகம்...
சின்னஞ் சிறிய...
இல்லாமை சொல்லி...
மின்னாயிரம் ஒரு...
ஒன்றாயரும்பிப் பலவாய்...
அய்யன் அளந்தபடி...
அருணாம் புயத்தும்...
தஞ்சம் பிறிதில்லை...
பாலினும் சொல்லினியாய்...
நாயேனையும் இங்கொரு...
தங்கச்சிலை கொண்டு...
தேறும்படி சில...
வீணே பலி...
ககனமும் வானும்...
வல்லபம் ஒன்றறியேன்...
தோத்திரம் செய்து...
பாரும் புனலும்...
தனம் தரும்...
கண் களிக்கும்...
அழகுக்கு ஒருவரும்...
என் குறைதீர...
தாமம் கடம்பு...
நயனங்கள் மூன்றுடை...
தங்குவர் கற்பகத்தாருவின்...
குறித்தேன் மனத்தில்....
பயிரவி பஞ்சமி...
செப்பும் கனகக்கலசமும்...
விழிக்கே அருளுண்டு...
கூட்டியவா என்னை...
அணங்கே அணங்குகள்...
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை