skip to main
|
skip to sidebar
அபிராமி அந்தாதி
2010/07/09
சொல்லும் பொருளும்...
நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்:28 | ராகம்:மோகனம்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
நறுமணப் பூங்கொடி போன்றவளே! என்றைக்கும் புதிதாகத் தோன்றும் உன் மலர்ப் பாதங்களை நாளும் பொழுதும் வணங்குகிறவருக்கு இந்திர பதவியும், முக்தியடைவதற்கான பாதையும், அனைத்துக்கும் மேம்பட்டதான - ஆனந்தக் கூத்தாடும் சிவனுடன் சொல்லில் கலந்த பொருள் போல் நீ இணைந்திருக்கும் - சிவலோகமும் கைகூடும்.
'பரிமளப் பூங்கொடியே! நின் புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும், செல்லும் தவநெறியும், நடமாடும் துணைவருடன் (நீ) சொல்லும் பொருளும் எனப் புல்லும் சிவலோகமும், சித்திக்குமே' எனப் பிரித்துப் பொருள் சொல்லியிருக்கிறேன்.
சொல் இல்லாமல் பொருளை அறியவே முடியாது. பொருள் இல்லாத சொல் வெறும் ஓசை. ஓசை அறிவைத் தொடாது. பொருள் வேண்டும்; பொருளை அறியப் பொருத்தமான சொல் வேண்டும். அர்த்தநாரி என்று முன்னர் பல முறை பாடிய பட்டர் இங்கே சிவ-சக்தியை, சொல்-பொருள் என்று அழைப்பது சுவையான உவமை.
புது மலர்த்தாள் என்றார். அபிராமியின் மலர்ப் பாதம் எப்படி புதிதாகும்? அதே அபிராமி தானே? இருக்கலாம்; ஆனால் பட்டருக்குத் தாள் புதிதெனப் படுகிறது. காரணம், அது வெறும் தாளா? இல்லை, மலர்த்தாள். மலர்களால் மூடப்பட்ட பாதம். ஏன் மூடப்பட்டிருக்கிறது? முன்பே சொல்லியிருக்கிறார், 'அடியவர் சாத்தும் கடம்பு மணம் நாறும் நின் தாள்' என்று. பிரம்மன், விஷ்ணு, சிவன் தொடங்கி அனைத்து தேவர்களும் அடியார்களும் தினம் புது மலர்கள் சாற்றுவதால் அபிராமியின் பாதம் தினம் புதிதாக மலர்வதாகப் பாடுகிறார். நல்ல கற்பனை. புதுத் தாள் என்றால் புதுக் கை, புது முகம் என்று எல்லாமே புதிதாமோ? ஏன் தாளை மட்டும் புதிதென்கிறார்?
சீதையின் முகத்தை விவரிக்க முடியாமல் தடுமாறியதேன் என்று லட்சுமணனைக் கேட்ட போது, "ஐயா, நான் அவருடைய பாதங்களைத் தானே பார்த்துக் கொண்டிருந்தேன்? பிராட்டியின் பாதப் பொலிவை அறிவேனே தவிர, முக அழகை விவரிக்க அறியேன். தாள் கண்டேன், தாளே கண்டேன்" என்றானாம். அந்தக் கற்பனை பட்டருக்கும் பொருந்தும். 'பாதம் என் சென்னி' என்று பாடிய பட்டருக்கும் அபிராமியின் பாதங்களைப் பற்றியே அதிகம் தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது.
அழியா அரசு என்பதற்கு 'என்றைக்கும் அழியாத அரசபதவி' என்று பலர் பொருள் சொல்லியிருக்கிறார்கள். அழியாத அரச பதவியா? அது என்ன? மனிதருக்கெல்லாம் மேலானவர் அழியாத தேவர் என்றால், தேவர்களையே ஆளும் பதவி அழியாத அரசு பதவி அல்லவா? மேலும், மனிதப்பிறவியே மாயை எனும் பட்டர், சாதாரண அரச பதவியையா பலனாகச் சொல்வார்? பிறவா நிலையடைந்த பின் கிடைக்கும் அரச பதவியைத்தான் அழியா அரசு என்கிறார். இங்கே இந்திர பதவியைப் பொருளாகச் சொல்லியிருக்கிறேன். அதற்கு மேலும் ஏதாவது அழியா அரசு இருக்ககூடும். பிரம்மலோகம், விஷ்ணுலோகம் என்று இன்னும் பல தேவ உலகங்கள் இருப்பதாகவும் அவை முக்தியடையும் ஆத்மாவின் தற்காலிக இருப்பிடங்கள் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அவற்றையும் 'அழியா அரசு' என்ற வகையில் சேர்த்திருக்கிறார் பட்டர்.
சிவலோகத்தை மட்டும் தனிப்படுத்திச் சொல்வானேன்? சக்தி அங்கே இருப்பதே காரணம். புல்லும் என்பதற்கு இணையும், புணரும், சேரும் என்று பொருள். நடமாடும் துணைவருடன் - சக்தியின் தாளத்திற்கு சிவன் நடனமாடுவதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறார் பட்டர், புல்லும் - அபிராமி இணைந்திருக்கும், இடம் சிவலோகம் தானே? சிவலோகம் தவிர தேவ உலகங்கள் உள்ளிட்ட அனைத்து உலகங்களும் ஊழிக் காலத்தில் அழிவன என்று சிவ/சக்தி புராணங்கள் சொல்கின்றன. அதனால் அனைத்திலும் மேம்பட்ட சிவலோகமும் சித்திக்கும் - கைகூடும் - என்றார்.
எளிமையான பாடல் என்றாலும் பட்டரின் உவமைகளும் கருத்துச் செறிவும் பருகத் தூண்டும் பழச்சாறு போல் இனிக்கிறது. பண்ணோ பழச்சாறை விட இனிமை.
தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)
>>>
நூல் 29 | சித்தியும் சித்தி...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
அபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர்
முத்துக்குமாரஸ்வாமி பாகவதருக்கு
என்றென்றைக்கும் நன்றி.
:இந்திரா
சமீபத்தில் கருத்திட்டவர்கள்
உலாவியில் JavaScript தேவை
ஆதி முதல்
▼
2010
(100)
►
ஜூன்
(17)
▼
ஜூலை
(31)
உறைகின்ற நின்...
மங்கலை செங்கலச...
கொடியே இளவஞ்சி...
கொள்ளேன் மனத்தில்...
மணியே மணியின்...
பின்னே திரிந்து...
ஏத்தும் அடியவர்...
உடைத்தனை வஞ்சப்பிறவியை...
சொல்லும் பொருளும்...
சித்தியும் சித்திதரும்...
அன்றே தடுத்தென்னை...
உமையும் உமையொருபாகனும்...
ஆசைக்கடலில் அகப்பட்டு...
இழைக்கும் வினைவழியே...
வந்தேசரணம் புகுமடியாருக்கு...
திங்கட் பகவின்...
பொருளே பொருள்முடிக்கும்...
கைக்கே அணிவது...
பவளக் கொடியில்...
ஆளுகைக்கு உந்தன்...
வாணுதற் கண்ணியை...
புண்ணியஞ் செய்தனமே...
இடங்கொண்டு விம்மி...
பரிபுரச் சீறடி...
தவளே இவளெங்கள்...
தொண்டு செய்யாது...
வெறுக்கும் தகைமைகள்...
வாழும் படியொன்று...
சுடருங் கலைமதி...
குரம்பை அடுத்து...
நாயகி நான்முகி...
►
ஆகஸ்ட்
(31)
►
செப்டம்பர்
(21)
பண் வகை
ஆபேரி
(5)
ஆரபி
(4)
கானடா
(5)
காபி
(5)
காம்போதி
(5)
சண்முகப்ரியா
(5)
சஹானா
(5)
சாரங்கா
(5)
சாவேரி
(5)
சுத்த தன்யாசி
(5)
சுருட்டி
(1)
தன்யாசி
(5)
நாயகி
(5)
பாகேசுவரி
(4)
பிலஹரி
(5)
பூபாளம்
(3)
பைரவி
(5)
மத்யமாவதி
(2)
மோகனம்
(5)
ரஞ்சனி
(5)
ஹடானா
(5)
ஹம்சாநந்தி
(5)
இந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.
வளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.
எத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.
அறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.
பதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.
கீதா சந்தானம்
|
அப்பாதுரை